பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

11

 என்று வாயாரப் புகழ்ந்தார். ஏறத்தாழ எண்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ள இந்நூல் உலக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது அல்லவா?

திருக்குறளின் அமைப்பு

இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைத் தெளிவாக விளக்கும் திறம் உடையது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. உலகிற்கு இன்றியமையாத உண்மைகளை நூற்றுமுப்பத்துமூன்று தலைப்புக்களில் சிறப்பாக விளக்குவது. அத்தலைப்புக்கள் அதிகாரங்கள் என்று கூறப்படும். அதிகாரம் ஒன்றிற்குப்பத்துக்குறட்பாக்களாக ஆயிரத்து முந்நூற்று முப்பது அரிய பாக்களைத் தன்பால் கொண்டு விளங்குவது. இல்லறவியல், துறவறவியல், அரசியல், அமைச்சியல், அங்கவியல், களவியல், கற்பியல் என்னும் முக்கியமான உட்பிரிவுகளைக் கொண்டு ஒளிர்வது. பாயிரம் என்னும் அடிப்படையின் மீது எழுப்பிய எழுநிலை மாடத்தைப் போன்று திகழும் திருக்குறள், தெய்வத் தமிழ் ஒளி வீசும் அறிவுத் திருமாளிகையாகும்.