68
அறவோர் மு. வ.
சமுதாய அமைப்பை மாற்றினாலொழிய, ஒருமித்த சிந்தனையுள்ள சமுதாயத்தைப் படைக்க இயலாது என்று நம்பினார். மரபுவழிச் சிந்தனைகளாலும், பண்பாட்டு வழக்காலும் பாதிக்கப் பெற்றுள்ள தமிழ்ச் சமுதாயம் தம்முடைய வாழ்க்கைச் சிக்கலிலிருந்து விடுதலை காண வேண்டுமென்றால், எண்ணப் புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார்.
பொல்லாதவர் கொடியவர் என்று சிலரைச் சுட்டிக் காட்டி எல்லாத் தீமைக்கும் அவர்களே காரணம் என்று பழியை எல்லாம் அவர்கள் மேல் சுமத்துவது பொதுவான வழக்கம். அது பெரும்பான்மையான நாடகங்களும், காவியங்களும் காட்டிய மரபு. அவர்கள் ஏன் பொல்லாதவர்கள் ஆனார்கள்? ஏன் கொடியவர்கள் ஆனார்கள் என்று உணர்வதே அறிவுநெறி; கருதியதை வலியுறுத்துவதற்கு. அறிவு வேண்டியதில்லை. காரணம் கண்டு தெளிவதற்கே அறிவு வேண்டும்’ என்னும் 'மலர்விழி’ நாவலின் முன்னுரையிலிருந்து டாக்டர் மு. வ. வின் சமுதாய நோக்கினை நன்கறிய முடிகிறது. சமுதாயத்தில் பீடித் திருக்கும் நோயைச் சுட்டிக்காட்டி, மருத்துவம் காண்பவராக மட்டுமின்றி, நோயின் மூலத்தையே ஆழ்ந்து நோக்கி அறிவிக்கும் நுண்ணாய்வு மருத்துவராக விளங்குகின்றார் மு. வ. 'அல்லி’ என்ற நாவலில் தாம் படைத்த 'அறவாழி’ என்னும் பாத்திரம் வாயிலாகவே தம் சமுதாய நோக்கத்தைப் புலப்படுத்தியுள்ளார்.