பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நடைமுறைக்‌ கொவ்வா, நாட்டின்‌ நலன்களுக்‌ கொவ்வா நாச
இடைமுறை, 'தமிழர்‌ தங்கள்‌ இயல்முறை' யெனவே யேற்றுக்‌
கடைமுறைக்‌ கதைக ளெல்லாம்‌ கலையெனக்‌ கருத்தில்‌ வைத்துக்‌
கொடைமுறை தவிர்த்துக்‌ கொண்ட கோட்பாட்டைக்‌ கொன்று தீர்த்தீர்‌!

பகையெனக்‌ கொண்ட வேடன்‌ பதுங்கியே யெறிந்த வேலால்‌
மிகையெனப்‌ பட்ட வெம்புண்‌ மெலிவுதீர்தந் தெழுந்த சிங்கம்‌,
குகையினை விட்டுக்‌ குந்திக்‌ குமுறல்போல்‌ கொதித்துத்‌ தாழ்ந்தோர்‌
புகையினில்‌ நெருப்பாய்ப்‌ பொங்கிப்‌ புறங்காணத்‌ துடிக்கச்‌ செய்தீர்‌!

"விறகினில்‌ பற்றிக்‌ கொண்ட வெந்தண லெனஎன்‌ சிந்தை
முறுகவெந்‌ தெரிய நீங்கள்‌ மொழிந்ததால்‌, மொழிந்தேன்‌ மாமா!
இறுகிநீர்‌ வெறுக்கா தென்னை எழுந்துவா ருங்கள்‌ உண்ண;
பிறகுநா மாறித்‌ தீரப்‌ பேசலா" மென்றான்‌, நித்யன்‌.

மாமா சாதுர்யமாகச்‌ சாற்றுதல்‌


"எதுவாக இருந்தா லென்ன? எப்படி யெவ்வா றாகப்‌
பதிவாகி யிருந்த தோவப்‌ படித்தானே படிவம்‌ தோன்றும்‌!
மதுவாக வொருவண்‌ டுண்ணும்‌; மலமாக வொருவண்‌ டுண்ணும்‌;
பொதுவாக இதனை யாரிப்‌ புவியினில்‌ மாற்ற வல்லார்‌?

நானாக நவில்வ தன்று; நன்றாக நினைத்துப்‌ பார்நீ!
"கோனாக வேனு மன்றேல்‌ கூலியா ளாக வேனும்‌,
தானாக வானா லன்‌றித்‌ தரமில்லை யாக்கற்‌' கென்றே
தேனாக இனிக்கச்‌ சொன்னார்‌ தெரிந்தவ" ரென்றார்‌ மாமா.