பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


தின்பண்டம் வாங்கி வருவதைப்போல, இந்த உலகை விடுதலைக்கு ஒர் உண்மையைக் கொண்டு வந்து கொடு!

எனது படுக்கை, திடீரென்று மரணத்தால் சுருட்டப்பட்டு விட்டால், என்னுடைய ஆசை, உறவுகளத்தனையும் வெறுங்கையோடு தெருவில் நிற்கக்கூடாது.

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த அந்த வான் பறவையின் வரலாற்றை எனக்கும் அறிவித்துவிட வேண்டும்.

பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப்போல, எனதுள்ளம், திறக்கப்படும் போதெல்லாம் - என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன.

துங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தலையைத் தொங்க விட்டுக் கொள்வதைப் போல; என்னுடைய அந்திமக் காலத்தில், உண்மையைக் கண்டுபிடிக்கும் எனது ஆர்வங்கள் தொங்கப் போட்டுக் கொள்ளக் கூடாது.

நல்ல பகல் நேரத்தில், சவுக்குத் தோப்பில் கேட்கின்ற பேரிரைச்சல் போல - என்னுடைய இதயம், எப்போதும் இரைந்து கொண்டே இருக்கிறது.

திருவிழா முடிந்த பிறகு, விழா முடிந்தப் பெருமையில் ஊர் திரும்பும் பக்தர்களின் முகத்திலே இருக்கின்ற அமைதி -அந்தப் பறவையின் வரலாற்றை அறிந்த பிறகுதான்; எனக்கும் இருக்குமென்று நம்புகிறேன்.

இவ்வளவு பேராசை எனக்கு இருப்பதற்குக் காரணம் - நான் சிறு வயதிலேயே - தாயின் ஒரு மார்பகத்தில் பால் குடித்துக் கொண்டிருக்கிற போதே மற்றொரு மார்பகத்தை - யாரும் சுவைத்துவிடக் கூடாதே என்று எண்ணியப் பழக்கந்தான்.

இதை மனிதப் பேராசை என்று எண்ணிவிடாதே! குழந்தை ஒரு தெய்வம் இது தெய்வீக ஆசை!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என் நெஞ்சே! உன்னோடு நான் உறவாடுகிறேன்.