பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

101


மனசாட்சியையும் -உன்னையும், சூழ்நிலைச் சந்தையில் - சொற்ப விலைக்கு விற்று - நெடிய நாட்களாக, மேற்கூறிய இரண்டுமற்றவனாக இருந்து கொண்டிருந்தவன்.

அறிவாளர் பனுவலாலும் - அறிந்தோர் மொழியாலும் - செறிந்தோர் அமைதியில் செழித்த அடக்கத்தாலும் இழந்த இரண்டையும் நான் திரும்பப் பெற்றேன்.

கடலுக்கு அடியில் இருக்கின்ற மணல், எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதாக எந்த கந்தகப் பூமியும் ஒத்துக் கொள்வதில்லை.

அதைப்போல, எனது இதயத்தின் அடித்தளத்தின் சூட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசைகள் - குளிர்ச்சியோடில்லை.

எண்ணமே! அதோ அந்தப் பறவை வருவதாகத் தெரிகிறது.

எனது கனவுகள் உருவம் பெற, அந்தப் பறவையிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வா!

நிலவுக்கு அருகில் இப்போது அப்பறவை என் கண்களுக்குத் தெரிகிறது.

அதன் வருகையால் அந்த நிலவு மேலும் குளிர்ந்து விட்டது: இல்லையெனில், கடல் பொங்குவதைப்போல் - பக்கத்திலே உள்ள நீர்வீழ்ச்சியின் தேக்கம், அலைகரம் நீட்டுமா?

திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவில், சந்தனத் தென்றல் நுழையும் போது - தொழுநோய்ப் பிடித்தவன் - தன்னுடைய வேதனையை மறந்து - அந்தத் தென்றலின் குளுமையையும் இரசிக்கிறான்!

அதுபோல, இழுக்கு அழுக்கால்; இன்னல் துன்பத்தால் வழக்காய் வாடிக்கொண்டிருக்கும் இந்த வியனுலகம் - ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டேன்!

அந்த கிராம மக்களது கூச்சல், இப்போது சிறிது அடங்கியது!

நாடகம் முடிந்த அரங்கமும் ஆட்டம் முடிந்த இடுகாடும், அமைதியைத்தான் வைத்துக் கொண்டிருக்கும்!