பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



எவனொருவன், தலைவனின் இதயத்தில் உருவானத் திட்டங்களைக் காலம் பார்த்து - உனர்ந்து - அதனை ஏற்றுச் செயல்படுத்த நெருங்குகிறானோ - அவனே, நல்முத்தை அடைகிறான்.

மிகவும் துன்பத்தை ஏற்று நாட்டின் வளத்தை உயர்த்த மூச்சடக்கி முத்துக் குளித்தாலொழிய - சிப்பி கிட்டாது.

அதனைப்போல, ஆளும் கட்சிக்காரர்கள் அறிஞர்களைத் தேடிச் சென்றாலொழிய நாட்டின் எதிர்காலம் நன்கு அமையாது.

நாட்டின் பெருந்தலைவர்கள், தங்களின் உண்மையான கீர்த்தியை, நெருங்கி வருபவர்களுக்கே வழங்குகின்றனர்.

எவ்வளவுக்கெவ்வளவு, பொருள்களை அதனதன் தகுதிகளைப் பார்த்து நாம் நெருங்குகிறோமோ - அவ்வளவுக்கவ்வளவு, அப்பொருள்களின் பயன், நமக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கே கிட்டுகின்றது.

நான், கொஞ்ச துரம் அப்படியே கடலடியில் நடந்து சென்றேன். அங்கே கடற்செடிகள் இருந்தன. சங்குகள் பல வண்ணத்தில் காட்சியளித்தன.

கடல் செடி ஒன்றைப் பிடுங்கிக் கிள்ளிப் பார்த்தேன். அது மிகச் சுலபமாக என் கைக்கு வந்துவிட்டது. அதன் பசுமை, கடலின் கரிய நிறத்தைவிடக் கரும்பச்சையாக இருந்தது.

அதன் இலைகளின் மேலே, பஞ்சு போன்ற மென்மைச் சுணைகள் இருந்தன. இந்த இடத்தில் இது தழைப்பதற்கு அவசியம்தானா? என்று, எனது சராசரி மூளை கேட்க ஆரம்பித்தது.

அப்போது அந்தச் செடி, "நான் மீன்களின் இரையாகவே இங்கு இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.

'மீன் குஞ்சு'கள், என்னுடைய தழையால் வளர்ந்து, அதன் பிறகுதான், அவை புலால் உண்ண ஆரம்பிக்கின்றன.