தமிழெனும் கன்னிப் பெண் தோன்றிய பொதிகையிலே பிறந்த தென்றலே!
அறிவெனும் மணத்தைத் தமிழ் அவனியிலே கமழவைக்க மழலை நடைபோட்டு வரும் வசந்தனே!
பொருப்பை விட்டெழுந்து, பொறுப்போடு விருப்பு வெறுப்பற்று, நீ தமிழகத்தில் உலா வருகிறாய்!
உனக்கிருக்கும் கடமை உள்ளம், அரசுக் கட்டிலிலே ஆரோகணித்திருப்போருக்கும் இல்லையே, என்று நகை புரிகிறாயா? செய்! செய்!
மலர்த் தோழா! நீ வந்து விட்டாய் என்பதைத் தாமரை பூத்துத் தண்ணழகு பெறும் தடாகங்கள் மூலம், நான் நோக்குகிறேன்!
மனம் நிறைந்த காற்றாக - இளம் வேனிலாக, நீ, சில்லென்று என்னை விசிறி விடுகிறாய்!
மனதை மயக்கும் மாலைப் பொழுது: உனைக் கண்டு மகிழ்வுறுவதைப் பார்க்கிறேன்.
காதல் கனிந்த காரிகையர்கட்கு; உன் வரவு சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரிப் பொழிந்ததைப் போன்றதாகிவிடுகிறது.
தேன் வெறி பிடித்த வண்டுகள், அப்போது எழில் மலர்களை முத்தமிடுகின்றன.