புலவர் என்.வி. கலைமணி
133
அதனாலன்றோ, அவர்கள் உன்னைக் கட்டித் தழுவி ஆர அணைத்துப் பூரிக்கிறார்கள்.
தென்றலே! நீ யார்? ஏனென்றால், உன் பெயரை மட்டும் தான், நான் கேட்டிருக்கிறேன்.
உன் ஊர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை! ஏதோ அருவமாக மாலை நேரங்களில் வருகிறாய்!
குறிப்பிட்ட வசந்த காலத்தில்தான் - என் அகக் கண்ணால், உணர்வால், நான் உன்னைக் காண்கின்றேன். நேரில் பார்க்கலா மென்றால்தான் முடியவில்லையே!
நீ ஆணா பெண்ணா என்று, என்னால் அறிய முடிய வில்லை! புலவர்கள் உன்னைப் பெண் என்று கூறுகிறார்கள்.
'தென்னன்’ என்ற பெயரும் உனக்கு உண்டல்லவா? அதனால் நீ, ஆணாக இருப்பாயென்று நம்புகிறேன்.
ஆணாக இருந்தால் நீ பெண்ணைக் காதலிக்க உரிமையுண்டு.
பெண்ணென்றாலும் சரி; நீ ஆணைக் காதலிக்க முடியும். ஆனால், நீதான் ஆணையும் பெண்ணையும் காதலிக்கின்றாயே!
அதனாலன்றோ உன்னைக் கண்டதும், ஆண் - பெண் இருபாலருக்குமே காதல் நோய் முகிழ்த்து விடுகிறது:
இது என்னே உன் கோலக் கூத்து! உன்னை நம்ப முடியவில்லை தென்றலே! ஏனென்றால், நீ இருவரையும் கிள்ளி மோத விட்டு வேடிக்கைப் பார்க்கின்றாய்!
எப்படியானாலும், நீ மக்கட்கு உதவியைச் செய்கிறாய்
தென்னனே! எனது இதயம் கவர்ந்த இன்பமே! நான் அரசியல்வாதி!
இந்தக் கண்ணோட்டத்திலே உன்னைக் காணமாட்டேன்!
நீ, ஆண் பெண், இருபாலரையும் மகிழ்வூட்டுகிறாய்! - கவருகிறாய்!