புலவர் என்.வி. கலைமணி
145
பச்சைப்புல் மீதிருக்கும் ஒவ்வொரு பனித்துளியும், உன் எழிலை எழுதி எழுதிப் பழகுகின்றன.
அடிவானத்தில், நீ தொட்டில் இட்டுக் கொண்டிருக்கின்றாய்!
வானத்தின் சிம்மாசனத்தில், நீ மதியத்தில் அமருகின்றாய்!
அந்தி நேரத்தில், கண் சிவந்த வீரனைப்போல் காட்சி தருகிறாய்!
உனக்கிருக்கும் பெருந்தன்மையான பண்பால், நிலவிற்கு வழிவிட்டுப் போய் மறைகின்றாய்!
உன்னுடைய தயாள குணத்தை விவரிக்க, பைபிளின் கர்த்தா ஏசு பெருமான் வரவேண்டும்!
திருக்குரானின் மூலவர் நபிகள் நாயகம் வரவேண்டும்.
தம்ம பதத்தின் தலைவன் புத்தர் பெருமகன் வருகை தரவேண்டும்.
இருண்ட காட்டிலே நீ எட்டிப் பார்க்கும்போது, தாயைக் கண்ட சேயைப் போல, அரும்புகள் கூச்சமற்றுச் சிரிக்கின்றன!
அறிவுக் காட்டில் நீ நுழையும்போது, உனக்கு வழிவிட சந்தன மரங்கள் தயாராக இருக்கின்றன.
கதிரவனே! நீ ஒரு நகரத்தின் தலைவனா? ஒரு தேசத்தின் அரசனா? இந்தப் பூபாகத்தின் பெரும் சக்தியா? அண்டத்தின் சுழற்சிக்கு மூலமா?
உரிமையின் விளக்கே! நீ புறப்பட்ட நேரம் சரியான காலம்தான்.
அதனால்தான், என்னைப் போலிருக்கும் புழுக்கள் - பட்டாம் பூச்சிகளாய்ப் பறக்கின்றன.
நீ, கிழக்கில் வந்தவன் மட்டுமல்ல; மக்களின் மன வாழ்விலே வந்தவன்.
கடல் மீது மட்டும் நீ விளையாடவில்லை, கனவின் மீதும் விளையாடுகிறாய்!