150
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
என்னுடைய இளமைக் காலம் முழுவதும் பகலாக இருக்குமானால்... அட.... அடே.... பேராசை!
அலையின் மீது மத்தளம் தட்டும் உனது கரங்கள் - புயற்காற்றின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றபோது - வீரம் விளக்குகின்ற உனது வியன் மிகு அரசியலை, நான் புரிந்து கொள்ள முடிகின்றது.
பருவ காலங்களில், நீ மலையின் மீதும் அருவியின் தோள்மீதும்
மலரின் உதட்டின் மீதும் - தும்பியின் இறக்கைகள் மீதும்-
கேட்பாரற்றுக் கிடக்கும் காளான்களின் மீதும்
செந்தூர வண்ணங்கொண்டு நீ படரும் போதும் -
எங்கோ முளைத்திருக்கின்ற எனக்கு விடுதலை கிடைத்ததைப் போல உணருகிறேன்.
பாலைவனத்திலே காய்கின்ற உனக்கு பொழிலுக்கு இடையில் வேலை என்ன?
அழிவுக்கு முன்னால் அழுதுவிட்டு, களிப்புக்கு முன்னால் களிக்கின்றாயா?
எதற்கும் அடிப்படைக் காரணம் இல்லாமல், எதையும் செய்யமாட்டாய் என்பது அனைவருக்கும் - தெரியுமா என்ன?
அவனவன் அறிவின் தட்ப வெட்பத்திற்கு ஏற்றாற்போல் அல்லவா உன்னை எடைபோடுகிறான்!
ஆனால் நீ, எல்லோருடைய இதயங்களிலே இருக்கும் இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்கிறாய் அல்லவா?
ஏ, தத்துவ சோதியே! இயக்கத்தின் வளர்ச்சிக்காக இறந்தவர்களை தாலாட்டிவிட்டு - இருப்பவர்களையும் தாலாட்ட வருகிறாயா?
அனாதைகளுக்கு வாழ்வளித்துவிட்டு அடைய வேண்டிய செல்வத்தை அடைந்தவனையும் அருகிருந்து கவனிக்கிறாயா?