154
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
உலகம், நீ வாசிக்கும் யாழொலியை கேட்க ஆரம்பிக்கிறது. நீ காட்டும் அற்புதமான உதாரண உருவங்களைக் கண்டு ரசிக்கிறது.
ஆனால், எதிரிகள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு வசைமாரி பொழிகிறார்கள்.
அவர்கள் தூக்கமில்லாத குரங்குகள் - அவர்கள் கைகள் இழிவானவை.
அவர்கள் புருவம் ஒரு முட்டாளின் புருவம். அவர்கள் வாய், பாம்பு முட்டையிடுவது போலத் தீயவைகளையே முட்டையிடும் கருவாயாகும்.
அவர்களுடைய கண்கள் இறந்தவனுடைய கண்களாகும்.
அவர்களது ஆதிக்கம் சவப் பெட்டியின் மேல் தூவப்பட்ட பூக்களின் ஆதிக்கமாகும்.
அவர்களது நடை தொழு நோய் பிடித்தவனுடைய நடையாகும்.
அவர்கள் தலையிலே சூடிக் கொள்கின்ற கிரீடம் நாடே இல்லாத ஒரு ராசாவின் கிரீடமாகும்.
இந்தக் குறைபாடுகளின் தொகுப்பாக இருக்கின்ற எதிரிகளின் கண்டத்தின் உச்சியிலே இருக்கின்ற உன்னைச் சாடும்போது, நீ வசந்த காலத்தின் மாலை நேரத்திலே இருக்கின்ற மரத்தைப் போல குளுமையாக நின்று தலையை ஆட்டுகிறாய்.
இயல்பாக அடிக்கின்ற காற்றினால் வெவ்வேறு உருவங்களைப் பெறுகின்ற மேகத்தைப் போல, அவர்களுக்குப் பல உருவங்களை நீ காட்டுகிறாய்.
உனது முகத்திற்கு முன்னால் திரையில்லை - சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை - எழுத்துக்கு முன்னால் வேறெழுத்து இல்லை - உனது ஆட்சிக்கு முன்னால் வேறொரு ஆட்சி இல்லை.
பகலவனே! உன்னை நான் இதுவரையில் இவ்வுருவத்தால்
கண்டேன். என் உருவத்தை நான் உனக்கு சொல்லி விடவேண்டும் அல்லவா?