புலவர் என்.வி. கலைமணி
161
அதன் விரிவில், யாரும் குடித்தனம் செய்யவில்லை.
அதனுடைய செறிவில், யாரும் அணுவாகவில்லை.
ஆனால், அதன் ஒளிமட்டும் ஊருக்குப் பரவுகிறது.
அதன் வட்ட வடிவில் அறிவின் சிதறல்கள்.
அதன் மவுனத்தில், ஞானத்தின் தெளிவு.
தன்னிடத்திலே இருக்கின்ற பெரிய சக்தியினால், அந்த நிலா கர்வமடைவதில்லை.
தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி, அது நெடுநேரம் பேசுவதில்லை.
அது இழுக்கின்ற பிராணவாயுவில் - மக்களின் சக்தி இருக்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை முதல், பழையதாகப் போகின்ற மனிதன் வரை - அதன் பெருமைக்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.
ஏற்றத் தாழ்வென்ற படிக்கட்டுகளிலே ஏறி, அது சரிந்து கீழே விழுந்ததில்லை.
அந்த நிலவைக் கோபப்படுத்திப் பார்த்தாலும், அது கொதிக்கின்ற சூரியனாவதில்லை.
பூமியில் இருக்கின்ற சில அராஜக எரிமலைகள், அதன்மீது தீக்குழம்புகளை வாரி இறைத்தபோது கூட, நிலா சூட்டினால் - வெடிப்பு விடுவதில்லை.
பொறுமையின் எல்லைக் கோட்டில், அந்த நிலா நின்றுகொண்டு, அடக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி - நடந்து கொண்டிருக்கின்ற கரு முதல் கல்லறை வரையில் துன்பத்தால் அமர்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், நிலவை நம்பியே - தன்னுடைய வாழ்நாளைத் துவங்குகின்றது.
வீசியடித்த புயல், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்தப் புயலுக்குப் பெயர் மக்கள் எழுச்சி - அந்த எழுச்சிக்குக் கர்த்தா அறிஞர் அண்ணா என்ற வெண்ணிலா.