164
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
நிதானத்தைத் தவறாத மனிதன், நித்திரையில் நல்ல கனவைக் காண்கிறான்!
அவனின் ஆசைகள், பகலிலே பூத்துக் குலுங்குகின்றன!
தாயே! என்ன கனவு நான் காண்பேன்!
பயங்கரத்தின் தலை வாயிலிலே நான், பொடிப் பொடியாவதைப் போல, தினம் தினம் காண்கின்றேன்.
என் வாழ்நாள், மக்கிப் போன கயிற்றைப் போல இழை உரிந்துக் கிடக்கின்றது!
ஒரு காலத்தில் இது ஆனையைக் கட்டி இழுத்தது! இப்போது ஓர் ஆட்டைக் கூட கட்ட முடியாமல், கூடியரோக நோயாளியின் உடலைப் போல எலும்புருகி, சதை தளர்ந்து அவிழ்ந்து கிடக்கிறது!
தாயே! இந்த நீர்க் குமிழித் தேகம் எனக்கு வேண்டாமம்மா!
வானிலிருந்து இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் - என்னைக் காயப்படுத்துகின்றன!
அந்தத் துளிகள், தன் காலால் என் தலையை உதைத்து உதைத்து மிதிப்பதைக் கண்டு, விளையாட்டுப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள் தாயே!
பயங்கரவாதி சிரிப்பது போல், கீற்றுவிடும் மின்னல் தீக்கோடு, என்னைச் சுண்ட வைத்து விடாதா?
வீசுகின்ற புயற் காற்றில், என் உடல், விளாம்பழத்தின் ஒட்டைப்போல் - விரிசல் விடாதா?
வாழைமரத்தில், குத்திவைத்த இரும்புக் காரைப்போல் - துருப்பிடித்துபோன என் எதிர் நாட்கள், வீரர்கள் கையில் இருக்கும் வாளைப் போல, பளபளப்பாகத் தோன்றும் நாள் எந்நாள்?
தத்துவ விளக்கத்திற்காக என்னைப் படைத்து விட்டு, நீ மேகக் குதிரை ஏறிப் போகின்றாய்! சோகப் பாதையில் நான், போய்க்கொண்டிருக்கிறேன்.