பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



எனது சுதந்திர உணர்ச்சிக்கு, அவை விலங்குகளைப் பூட்டின போல் தோன்றுகிறது.

உண்மையிலேயே, நீ என்னைச் சுதந்திரமாகப் படைத் திருந்தால், பலி பீடத்தின் முன்னாலே நிற்க வைத்திருக்கும் ஆட்டைப் போல - ஏன் - என் உரிமை பெருமூச்சு விடவேண்டும்?

பலாப் பழத்தின் முட்களைப் போல, சொறி பிடித்த கற்களுக்கு இடையே, இப்போது எனது உடல், தேய்ந்து தேய்ந்து, நழுவி நழுவிச் செல்கின்றது!

இருபதாண்டு காலக் கொடுங்கோல் ஆட்சி ஒன்றிடமிருந்து தப்பித்த மக்களைப்போல, அக்கற்களை விட்டு ஒருவாறு பிழைத்து நகர்ந்து வந்து விட்டேன்.

திடீரென்று உயரமானதோர் இடத்திலே இருந்து - தட தடவென்று சரிந்து, கீழே விழுந்தேன்.

ஒட்டகத்தின் மீதிருந்த அரசனொருவன், ஒட்டாண்டியான போது, எப்படித் தள்ளாடித் தள்ளாடி நடப்பானோ, அப்படி நடுங்கிக் கொண்டே இப்போது செல்கிறேன்.

ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களில், அதன் தொண்டர்களது உடம்பு, பட்ட அடி உதைகளால் படுகாயங்களாவதைப் போல், எனது உடம்பு கீழே விழுந்தபோது படுகாயங்களாகி விட்டன.

இருந்தாலும், எனது உடலை அந்தச் சரிவுகளால், அழிக்க முடியவில்லை . தாயே!

உனது சாகாவரம் பெற்ற இலக்கிய ஏடுகளில் ஒன்று, எனக்குக் கவனம் வருகிறது அம்மா!

சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன், "செந்நாய் சீறினாலும் - சிறுத்தைகள் உறுமினாலும் - கலங்கத் தேவையில்லை” என்பதே அது.

எனது பாதை, பள்ளங்களும் - மேடுகளும் நிறைந்தவை என்றாலும், விழும்போதுதான், மேடும் பள்ளமும் தெரிகிறது!