பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




ஒரு காலத்தில், இந்த நாட்டின் மானம் எழுதப்பட்ட பத்திரமாக அது இருந்தது.

அதை எடுத்துச் சில சிறுவர்கள் கப்பல் செய்து விட்டுவிட்டனர்.

அந்த எழுத்துக்கள் நீரில் கரையும்போது, என் மானமும் கரைந்து கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

தாயே! இதுவும் உன் திருவிளையாடலா?

தமிழர் மானத்தைக் கரைக்க ஓர் ஊழிப் பெருவெள்ளம் எப்போதும் படையெடுத்ததில்லை! எடுத்தால், அது - வென்றதுமில்லை, என்பதை நீ அறிவாயே - அம்மா!

தாயே! இப்போது ஒரு காய்ந்த இலையின் மீது, எறும்பு ஒன்று மிதந்து செல்கிறது. அதனுடைய முகத் தோற்றத்தைப் பார்க்கும்போது - உரிமை இழந்த - கடல் கடந்த தமிழர்களைப் போல, எனக்குப் புலனாகிறது.

அதோ அந்த இலை, இப்போது என்னருகே வருகிறது!

பளபளக்கும் என்னுடைய உடலைப் பவழமலை என்று நினைத்து, எறும்பு என்மீது ஏற ஆரம்பித்து விட்டது.

அதோ பாரம்மா, அந்த எறும்பு தனது தகுதி, திறனை அறியாமல், சரிந்து கீழே விழுந்து, நீரில் மூழ்கி எழுவதை! இஃது, சில பேதை மனிதர்களின் மன நிலையைப் போல - இல்லையா அம்மா?

தாயே! பொய்யானத் தோற்றத்தை, ஏன் அளித்தாய்?

வாழ வேண்டிய ஓர் உயிர், நீரில் மூழ்கிப் போய்விட்டதே!

"அழுக்காறு கொண்டார்க்கு அதுவே சாலும்", என்று உலக, ஆசான் வள்ளுவன் கூறினானே, அஃது, இந்த எறும்பைப் போன்ற மனிதர்களுக்குத்தானா?

மனித சகாப்தம் என்பதைக் காலம் ஒன்றால்தான் விளக்க முடியும்.

அந்த விளக்கத்தில் இருக்கின்ற ரகசியங்களைக் காலம் ஒன்றால்தான்; பிறகு பிறப்பவர்களுக்கு அறிவிக்க முடியும்.