பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



நான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு சீமாட்டியாக இருந்தால், எனது மாளிகையின் மேற்பரப்பில், அன்புக் காதலனிட்ட உயிர் முத்தங்களை, என் உதட்டிலே எப்படி விளையாடுகின்றன என்பதைத் தன்னந்தனியே நான், சிந்திப்பேன் அல்லவா?

ஆனால், நான் தொழிலாளிக்கு வாழ்க்கைப்பட்டவள்! எனக்கு அவரிட்ட முத்தம் வட்டியிலே மூழ்கிப்போய் விட்ட குத்து விளக்காகும்!

அந்த ஒளியை நினைத்து, நானும் பெருமூச்சு விடுகிறேன்.

அப்போது அந்த தொடுவான் மட்டும், அவ்வளவு அழகாக இருந்திராவிட்டால், இந்த நினைவு கூட வந்திருக்காது.

அண்ணா ஏழைகளின் வாழ்விலே இருக்கின்ற இன்பத்திற்காகவே, நிலத்தை நோக்கி வளைந்தவர்.

அப்போது ஏழைக் குப்பாயி போன்றவர்கள், பழங்காலச் சிந்தனையைத் தொடுவானால் திரும்பப் பெறுகின்றார்கள்.

தொடுவான் இல்லையென்றால், உலகத்தில் வாழும் கோழிக் குஞ்சுகளான மக்களுக்கு, வானம் போன்ற கூடை கிடைக்காது.

எனக்குக் கவிதா நோக்கம் உண்டு - ஆனால், யாப்பைக் கடைந்தெடுத்து உண்டவன் அல்ல!

வானத்தை, கோழிக் குஞ்சு கவிழ்க்கும் கூடை என்பதை விட, இப்படித்தான் கூற எனக்குத் தோன்றுகிறது.

தனியாக மிதக்கும் ஒரு நீர்க்குமிழியைப் போலத் தெரிகிறது.

நிலம் ஊழிப் பெரும்வெள்ளத்திலே மிதக்கின்ற இலை.

நான் குமிழிக்குள்ளே இருக்கின்ற ஜீவன்!

இலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற உதடுதான் - நான் உள்ளே பார்க்கின்ற தொடுவானம்.

அண்ணாவும் இப்படித்தான்!