புலவர் என்.வி. கலைமணி
41
கறையற்ற அறிஞனுக்குக் "காலம்" என்று, நான் பெயர் சூட்டுகிறேன்.
யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு; 'நடத்து உன் நாடகத்தை’ என்று காலம் கூறுகிறது.
அதைக் கடவுள் பக்தன் அனாதி என்கிறான்.
'இதற்காகவே பிறந்தேன்' என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி-காலத்தின் வேகம் என்று, ஏன் கூறக்கூடாது?
பிறக்கப்போகும் கருவுக்குள், அறிஞர் அண்ணாவினுடைய நினைவு; கொப்பூழ் கொடி வழியாக, உணவோடு உணவாகச் செல்கிறதென்றால்,
இது, பத்து மாதத்தில் நடைபெறுகின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி, வேறென்னவென்று கூறுவது?
விதியென்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிறான்.
அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புடையதை-மதி என்று சித்தாந்தி கூறுகிறான்.
மதிக்கும் விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம்; அண்ணாவை - இரு சாராருக்கும் அளிக்கிறது.
சிற்பியினிடம் கிடைத்த கல், உளியின் போராட்டத்தில் துவண்டும் - இளைத்தும், பிறகு உருவம் பெறுகிறது.
விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணா, சிற்பியின் கல்பெறும் உருவம் போல வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிறார்.
விதி விமர்சனம் செய்கிறது - மதியும் விளக்கம் கூறுகிறது.
முடிவில், அண்ணா - அண்ணாவாகவே இருக்கிறார்.
அவர் ஒரு காலமாக இருப்பதால்தான், குளிரில் பூத்துக் கோடையில் கருகாத, வாசனைப் பூண்டாக; மலராமல் இருக்கிறார்.