பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

81


தெளிவில்லாத நெஞ்சமே! நீ தெளிவடையத்தான் தெள்ளு தமிழிலக்கிய வரலாற்றின் ஆதாரங்களைக் கூறுகின்றேன்.

பிறகு, ஏன், உன் பிஞ்சு நெஞ்சு பேதலிக்கிறது? பிறவும் சொல்கிறேன் கேள், என்று மேலும் பேச ஆரம்பித்தது.

நான் வேங்கை மரத்தில் மலர்ந்ததை அறிந்த சுரும்பினங்கள், வேங்கை மலர்ந்ததாக எண்ணிப் புலியைச் சூழ்ந்து, அதன் முகத்தையும் உடலையும், சுற்றிச் சுற்றி வலம்வர ஆரம்பித்தன. "கலித்தொகை என்ற இலக்கியத்தின் 46-வது பாடலைப் படித்துப் பார். உண்மையை உணருவாய்!

அது மட்டுமா? சில புலவர்கள், வேங்கைப் பூவாகிய என்னை - நெருப்புத் துண்டிற்கும் உவமையாக்கிக் கூறியுள்ளனர்.

'எரிமருள் வேங்கை இருந்த தோகை' என்று 'ஐங்குறு நூறு' அதை விளக்கி நிற்கின்றன.

‘எருவை நந்தொடு எரிஇணர் வேங்கை' என்ற 'பரிபாடலு'ம் கூறுகின்றது.

'நான் வேங்கை மரத்திலிருந்து உதிரும்போது என் காட்சி எப்படி இருக்குமென்று நீ பார்த்திருக்கிறாயா?'

எவ்வாறு நீ நோக்கியிருப்பாய் என் எழிற் காட்சிதனை? 'அகநானூற்றி'ல் வரும் 202ம் பாடலைப் படி உனக்கு அவகாசமிருந்தால்!

கொல்லன் - இரும்பைப் பழுக்கக் காய்ச்சித் தனது உலைக் களத்தில் அடிக்கிறான்.

இரும்புத் துகள்கள் ஒளிர்ந்து, சிதறிப் பறந்து, அவ்வமயம் விழுகின்றன.

இவ் விரும்புத் துகள்கள் உதிர்வது, வேங்கைப் பூ உதிர்வதைப் போல, இருக்கிறதாம்.

வண்ணவுவமையும் தொழிலுமையும் எப்படி கூறப்பட்டிருக்கிறது பார்த்தாயா?