பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


நிலத்தின் பிடிப்பிலிருந்து கொஞ்சம் நழுவினேன்!

நான் முளைத்து விட்டேன்! செடியாகி, நீண்ட காலமிருந்தேன்.

வைகறை கிழக்கில் முகிழ்த்தது!

இலைக்கு நடுவில் நான் சிறு துளியாக இருந்தேன்!

வேர் வழி எனக்கு உணவு தந்தாய்!

கார்வழி வளி தந்தாய்!

மொட்டானேன் நான் பட்டப் பகல் பறந்தது:

தட்ட நடு நிசியில் நீ வந்தாய்!

தொட்டாய்! தொட்ட இடத்தில் மணம் தந்தாய்!

கட்டுக் குலைந்தன இதழ்ச் சுருக்கம்!

பட்டுத் தெரித்தது சிரிப்பு: சிரித்துக் கொண்டே இருந்தேன்!

தென்றலாய் நீ என்னை முத்தமிட்டாய்!

சூறையால் பிறகு சுருண்டு விழுந்தேன்!

விழுந்த இடம் எது தெரியுமா? உன் மடிதானே மாதா!


இதிலிருந்து, களங்கமற்ற உள்ளங்கள் - உன் மடியில்தான் விழுந்து உறங்க முடிகிறதென்று, அறிய முடிகிறதல்லவா அம்மா?


வானவில்

தேனின் இனியவளே!

வானில் ஏன் என்னை வானவில்லாய் வரைந்தாய்?

வண்ணங்களை இந்த ஏழை வாங்கியது எங்கே?

எண்ணத்தின் விளைவா அவை! உன் எழுத்தின் திறமையா?

வளர்ந்த வானத்தில் கோட வைத்தாயே!

வாடிய பயிருக்கும் வாடுபவள் நீ, என்றார் வள்ளலார்!