பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

மாட்டினை இருநூறு ரூபாய்க்குக் கேட்டால், “தவிட்டு விலைக்குக் கேட்கிறான்” என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.

தவிட்டுக்குப் பிள்ளை வாங்குவதும், பிள்ளையைத் தத்து எடுப்பதும் அடிப்படையில் வேறுபட்டவை. தவிட்டுக்குப் பிள்ளை வாங்குவது குழந்தை இல்லை என்ற மனக்குறையை நிறைவு செய்ய. தத்து எடுப்பது சொத்துரிமையைத் தக்கவைக்க.

தத்தெடுக்கும் வழக்கம் பிராமணர்களிடத்தும் நகரத்தார் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்) சமூகத்திலும் சடங்குரீதியாகச் செய்யப்படுகிறது. இவ்விரு சமூகத்தவரும் ஆண் பிள்ளையை மட்டுமே தத்தெடுக்கின்றனர். தான் இறந்த பின்னர் தனக்கும் தன் முன்னோர்க்கும் நீத்தார் கடன் (நீர்க்கடன்) செய்ய வேண்டிய ஆண்பிள்ளைகள் இல்லாதவர்களின் ஆன்மா தாகத்தோடு அலையும் அல்லது ‘புத்' என்னும் நரகத்தில் கிடந்து உழலும் என்பது வைதீக நம்பிக்கை. இந்தக் குறையைப் போக்கும் பொருட்டும் தங்கள் சொத்துக்கு ஆண் வாரிசு தேடியும் மேற்குறித்த இரு சமூகத்தினரும் தத்து எடுக்கிறார்கள். இவ்விரு சமூகத்திலும் பிள்ளையைத் தத்துக் கொடுக்கிறவர்கள் அதற்குப் பதிலாகச் சில மரியாதைகளையும் சிறிது பணமும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஆனால் நாட்டார் மரபுகள் நீர்க்கடன் கழிக்கவும், சொத்துக்களை ஆளவும் தத்தெடுக்கின்ற மேல் சாதி மரபினை நிராகரித்தே வந்திருக்கின்றன.

பணத்துக்குப் பிள்ளை வாங்கி
பந்தியிலே விட்டாலும்
பந்தி நெறஞ்சிருமா
பாத்த சனம் ஒப்பிடுமா
காசுக்குப் புள்ள வாங்கி
கடத் தெருவே விட்டாலும்
கடத்தெரு நெறஞ்சிருமா
கண்ட சனம் ஒப்பிடுமா

என்பது தென்மாவட்டங்களில் கேட்கப்படும் ஒப்பாரியாகும்.