பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுப்பாசிரியர்

7


முஸ்தபாவை தமிழர்கள் சரியாகக் கண்டு கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. கண்டு கொள்ளவில்லை என்றால் அது நாம் செய்யும் தவறு."

(சுப மங்களா - மாத இதழ், மார்ச்சு 93)

எனச் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களால் ஓரளவு புரிந்து கொள்ளப்படா நிலை நிலவியபோதிலும் தமிழ் வளர்ச்சியில் உண்யைான ஆர்வமும் அக்கறையும் உள்ள பெருமக்கள் மணவையாரை சிறப்பாகவே புரிந்து கொண்டு, அவரது தொண்டைப் பாராட்டிப் பரிசும் விருதும் தந்து ஊக்குவித்து வருகிறார்கள் என்பதை நன்றியறிதலுடன் நினைவுகூரத்தான் வேண்டும்.

அத்தகைய ஊக்குவிப்பாளர்களில் தலையாய பெருந்தகையாக விளங்குபவர் தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களாவார். மணவையாரின் அருந்தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1988ஆம் ஆண்டில் மணவையாருக்கு "அறிவியல் தமிழ்ச் சிற்பி" விருதளித்துப் பாராட்டியபோது கூறிய புகழ் மொழிகள், ஊக்க மொழிகள் மணவையாருக்குப் பேரூக்கியாக அமைந்ததெனலாம்.

"மணவை முஸ்தபாவுக்குக் கிடைக்கின்ற பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் எனக்குப் பெருமகிழ்வூட்டக் கூடியவை; பெருமைத் தரக்கூடியவை. ஏனென்றால், இந்த மரியாதை உழைப்புக்குக் கிடைக்கின்ற மரியாதை; உண்மைக்குக் கிடைக்கின்ற மரியாதை, அவருடைய ஆர்வத்திற்குக் கிடைக்கின்ற மரியாதை, தமிழ் மேலும் வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இடையறாது பாடுபடுகிறாரே அந்தப் பணிக்குக் கிடைக்கின்ற மரியாதை" (முரசொலி 19.6.88) என்ற டாக்டர் கலைஞரின் சொற்கள் மணவையின் வேகமுடுக்கியாக மணவையாருக்கு அமைந்ததென்பதை இன்றும் அவர் பெருமையாகக் கருதுகிறார்.