பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ் வளர்சசியில் மணவையார் செய்த புரட்சி


தான் இவர் எதிர்காலப் பணி 'அறிவியல் தமிழ்ப் பணியே' என இனங்காட்டியது. அன்று முதல் இன்றுவரை அவரது முயற்சிகள் அனைத்தும் அறிவியல் தமிழ்ப் பணியாகவே இருந்து வருகிறது. இலக்கியப் பணியும் கூட ஏதாவது ஒரு வகையில் அறிவியல் சார்ந்துள்ள பணியாகவே அமைய வேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார்.

காலம் தேடும் தமிழ்

காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப நம் எதிர்காலத் தமிழ்ப் பணி அமைய வேண்டும், அப்பணியும் எவ்வகையில் அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்தும் நூலே இவர் எழுதிய 'காலம் தேடும் தமிழ்'. 1987ஆம் ஆண்டில் எழுதிய அந்நூலில், காலம்தோறும் காலப்போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழ் வளர்ந்து வந்ததைத் வரலாற்று அடிப்படையில் அற்புதமாகச் சித்தரித்துள்ளார்.

ஒவ்வொரு கால கட்டமும் ஒருவிதமான தமிழைத் தேடியுள்ளது. அவ்வக்காலப் போக்குக்கேற்ப நம்மவர்களும் அத்தமிழை சீர்மை செய்து காலத்தின் கையில் ஒப்படைத்துள்ளனர். அதனால் அஃது உயிர்ப்புள்ள மொழியாக இன்றும் விளங்குகிறது. அவ்வகையில் இன்றைய கால கட்டம் எம்மாதிரியான தமிழைத் தேடுகிறது. அத்தமிழை உருவாக்க எவ்வகை முயற்சியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை அருமையாக இந்நூல் விளக்குகிறது.

கொடுமுடியான அறிவியல் தமிழ்

சிறப்புத் தமிழைப் பாடமாகப் படித்த இவர், தான் பெற்ற தமிழறிவை வெறும் இலக்கியப் பணிக்குப் பயன்படுத்தாது தன் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட அறிவியல்