பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


கப்பட்டது. இத்தகு பொதுமை எண்ணம் மலரும் பூங்காவாக, இவர்தம் கருத்தரங்கு மாநாடுகளும், இலக்கியத் தொகுப்பு முயற்சிகளும் சீருடன் நடக்கிறது என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி.

மேலும், இத்தொகுப்பில், தமிழிலக்கியக் கடலிலே நீந்திக் களிக்கும், தேவார திருவாசக திவ்வியப் பிரபந்தங்களில் திளைத்து நிற்கும் சிலம்பொலியாரை இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்தும் எழுதத் தூண்டியுள்ளார் மணவையார். இஸ்லாமியப் பெருங்கவிஞர்கள் முதல் புதுக்கவிதை பாடுவோர்வரை தன் பார்வையைச் செம்மையாகச் செலுத்தியுள்ளார் சிலம்பொலியார் என இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய ஸ்ரீபால் அவர்களே வியந்து போகின்றார். இவர் தரும் பேரிலக்கிய சிற்றிலக்கியத் தகவல்கள், மேற்கொண்ட முழுமையான பார்வை, முதல் முறையாக இஸ்லாமிய நூல்களைக் கற்போருக்கு முழுமையான நிறைவைத் தரும் என்பதில் ஐயமேயில்லை.

இஸ்லாமியரான கவிஞர் மேத்தா சமண இலக்கியம் குறித்துப் பேசும்போது- வரலாற்றில் சமணர் பட்ட துன்பப்பாட்டைக் கண்ணீர் மல்க அறிய சொற்சித்திரங்களோடு காட்டுவது நெகிழ்ச்சிக்கு உரியது. சமயத் தத்துவம் தர வந்த சமணம் தமிழுக்கு அடிமையானதை, கடிதம் கொடுக்கும் தபால்காரரே காதல் கடிதம் எழுதத் தொடங்கினார், 'ஓட்டுக் கேட்க வந்தவரே ஓட்டுப்போடுவார் ஆயினார்! 'அகம்புறம் பாடியத் தமிழ் நிலத்தே இகம்பரம் பேச வைத்தார்' என்றெல்லாம் எழிலுற எழுதி, சிந்தாமணிச் செல்வப் பேரழகை உள்ளுற நிறுத்தி, உரைவழங்குவதைப் பார்க்கும் போது, சமய உணர்வு கடந்து ஒருமையே நிலவி, கவிஞனைக் கவிஞன் பாராட்டும் கண்கொள்ளாக் காட்சியே கவினுறு தரிசனமாகின்றது. இந்த உணர்வை விதைக்கவே