பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அறிவியல் திருவள்ளுவம்

இச்சான்றுகளால் 'கவி' என்னும் சொல் தமிழ்ச்சொல். 'கவி' என்பது இடையில் 'த்' என்னும் எழுத்துப்பேறு பெற்று ஐ இறுதியாகக் 'கவிதை' என்னும் சொல் ஆக்கம் பெற்றது. கவ்விக் கவரும் தன்மையை உடையது 'கவிதை'; தன் சொற்சுவையால் படிப்போர் உள்ளத்தைக் கவ்விக் கவர்வதை உடையது 'கவிதை'.

'த்+ஐ=தை' என்று முடிவுறும் சொற்களாக ஓதை,'அகுதை, மருதை, சிவதை’ என்னும் சொற்கள் தமிழில் உள்ளமையும் சான்றாகும். மொழி மூல அடித்தளத்தாலும், சொல் இலக்கண அமைப்பாலும், சொல்லாக்கக் கருத்தாலும் 'கவிதை' என்னும் சொல் புத்தாக்கமான தமிழ்ச் சொல்லேயாகும். இது செய்யுளையும் பாவையும் பாட்டையும் குறிக்கும்.

கவிதையும் பாவும்

இக்காலத்தில் கவிதையுடன் பிற சொற்களும் எந்த அளவில் வழக்கில் உள்ளன? புலவர்களில் சிலரே செய்யுள் என்னும் சொல்லை வழங்குகின்றனர். தனித்தமிழ் உணர்வுடையோர் 'கவிதை' என்னும் சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர், எனவே, பா, பாட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலோர் ‘கவிதை' என்பதையே வழங்குகின்றனர். இன்று ஆட்சி செய்வது கவிதையே.

இக்காலச் சூழலில் 'செய்யுள், பா' என்பன இலக்கணச் செறிவு உடையவை என்றும், முயன்று பொருள் காணப்பட வேண்டியவை என்றும் கருதப்படுவனவாகும். கவிதை "எளிமையானது, சுவையுள்ளது” என்று கொள்ளப்படுகிறது.