பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

69

உடலிய உளவியல்

அறிவியல் துறைகளில் 'உளவியல்' (Psychology) ஒன்று. இதன் ஒரு கூறாக 'உடலிய உளவியல்' (Physiological Psychology) உள்ளது. இஃது 'உள்ளத்தின் உணர்விற்கும் உடலின் செயற்பாட்டிற்கும் உறவு உண்டு' என்னும் கருத்தைக் கொண்டதாகும்.

உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி உடலின் நலத்திற்குக் துணை செய்யும். உள்ளத்தில் தோன்றும் தொய்வோ கலக்கமோ, அதிர்ச்சியோ உடலின் தொய்விற்கும் தாக்கத்திற்கும் துணையாகும். இஃது 'உடலிய' உளவியலின் கோட்பாடு.

மருந்து-வேண்டாம்-வேண்டும்

இக்கோட்பாட்டின் முன்னோடி அறிகுறிதான் "மருந்து என வேண்டா" என்றதும் "நாற்கூற்றே மருந்து" என்றதும் ஆகும்.

"மருந்தென வேண்டா" என்றது உளவியல் அறிந்த பாங்கு மருந்துவேண்டும் என்றது உடலியலும் நோயியலும் செறிந்த செய்முறைக் கருத்து.

பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும்.

உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும்.