பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலாசிரியரைப்பற்றி .......

85 அகவையைக் கடக்கும் நிலையிலுள்ள இந்நூலாசிரியர் எம்.ஏ., பி.எஸ்சி., எல்.டி., வித்துவான், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்.

ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் தலைமையாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் நிறுவனர் பேராசிரியர் - துறைத்தலைவராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1978 சனவரி 14இல் சென்னையில் குடியேறிப் பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி -- ஜூன் 1979) தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் மூன்று மாதங்கள் மதிப்பியல் பேராசிரியராகவும், 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் - காஞ்சித் தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் ‘வைணவச் செல்வம்’ என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995இல் 575 பக்கத்தில் வெளிவந்துள்ளது. இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. (த. ப. க. வெளியீடு) 1996-பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபு வழிப் பண்பாட்டு நிறுவனத்தில் மதிப்பியல் இயக்குநராகவும் பணியாற்றுபவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் மதிப்பியல் பேராசிரியராக (வாழ்நாள் வரை)வும் இருந்து வருபவர். ஆய்வு - மாணவர்கட்கு வழி காட்டியாகவும் இருப்பவர்.