பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


(8) கதிரவன், வாழ்க்கையின் உயிர்நாடி : கதிரவன்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு உயிர்நாடியாய் அமைகின்றான். இந்த அறிவியல் உண்மையினை அநுபவமாய்க் கண்ட இளங்கோ அடிகள் என்ற கவிஞர் பெருமான்.

“ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேகு வலத்திரித லான்”[1]

என்து தாம் இயற்றிய காவியத்தில் மங்கல வாழ்த்துப் பாடலாய் வெளியிட்டார். ‘கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பில்’ திளைத்த நக்கீரர் பெருமானும்,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு”[2]

என்று தம் திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகின்றார். ‘உலகம்’ என்பது சீவான்மாக்களை உணர்த்துகின்றது. ‘பலர்’ என்பது எல்லாச் சமயத்தினையும் குறிக்கின்றது. ஆற்றலின் மூலமாய் - ஆதிமூலமாய் - விளங்கும் ஆதவனே பொங்கல் விழாவின் கடவுளாய் - உழவர்கள் போற்றும் ‘சூரியநாராயணன்’ என்ற தலைவனாய் விளங்குகின்றான். ஒவ்வோர் ஆண்டிலும் உழவின் பயனாய்ப் புதியனவாய்ப் பெற்ற பொருள்களை ஆண்டவன் திருவடியில் காணிக்கையாய் வைத்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றனர் உழவர் பெருமக்கள்; பொங்கல் விழாவினைப் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர்.

பகலவனிடமிருந்து இயற்றப்பெற்ற ஆற்றல் (அணுவாற்றல்) தாவரங்கள்மூலம் பாய்ந்து பல்வேறு பொருள்களைத் தோற்றுவிக்கின்றன; இப்பொருள்கள் யாவும் ஒன்றுசேர்ந்து பொங்கல் வடிவில் காட்சியளிக்கின்றன. பொங்கலிலுள்ள பொருள்கள் யாவும் உழவன், தாவரங்களின் மூலம் பெற்றவை. நெய், தாவரங்களை உண்ட பசுவின்மூலம் அடைந்த பொருளாகும். பொங்கல் வடிவமாயுள்ள ஆற்றல், ஆற்றல் வடிவமாயுள்ள ஆண்டவனுக்கும் (கதிரவனுக்கும்) படைக்கப்


  1. 58. சிலப். மங்கல வாழ்த்து - அடி 4-6.
  2. 59. திருமுருகாற். அடி 1-2.