8
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பர்"[1]என்ற உரைப்பகுதி இதனை நன்கு விளக்குகின்றது. கோள்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழை இல்லையாயினும் குடகு மலையில் மழை பெய்வதும், காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதும் காவிரியின் தப்பா எனக் காவிரியின் சிறப்புக் கூற வேண்டிய இடத்தில் இக்கருத்து வருகின்றது.
"குளமீ னொடு தாட்புகையினும்
மிக்க வானுள் எரிதோன்றினும்”[2]
என்ற புறநானூற்றுப் பாடற்பகுதியும், "எரி, குளமீன், தாள் என்பன வான் மீன் விசேடங்கள்; இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலக வறுமைக்கு ஏதுக்கள்” என்ற அதன் உரைப்பகுதியும் இக்கருத்தினை உணர்த்துகின்றது.
இன்னோரன்ன குறிப்புகளினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோள்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற்புலமையுடையவராயிருந்தனர் என்பது பெறப்படுகின்றது.
சோதிடக்கலை: சங்கப் புலவர்களுள் சிலர் கணியர்களாகவும் இருந்தனர். "விளைவெல்லாம், கண்ணியுரைப்பான் கணி” என்பது புறப்பொருள் வெண்பாமாலை.[3]
கூடலூர்கிழார் என்ற புலவர் ஒரு கணி. மலை நாட்டிலுள்ள கூடலூரை இருப்பிடமாய்க்கொண்டு வாழ்ந்த புலவர். [4]இவருடைய பாடல்கள் இன்சுவையை நல்குபவை. இவர் ஒரு நாள், வானத்தில் ஒரு விண்மீன் தீப்பறக்கக் காற்றால் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்தரம், மிருகசீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினையும் கண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில், உலகாளும்