பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


 குற்றியலுகரம் அன்மையானும் அஃது உரையன்மை அறிக” என்பது மறுப்பு உரை.

காலம் என்பது அருவமாய் நிற்கும் ஒரே திரவியம். அதனை அளப்பதற்கு ஒரு கருவியும் இல்லை. ஆதித்தன் முதலிய கருவிகளால் கூறுபட்டதாய்க் கொள்ளப்படுவது. ஒருவித மயக்க நிலையேயாகும். படிப்பறியாத பால்காரி, சாணியால் கோடிட்டு வழக்கமாய் ஊற்றி வழங்கும் ஓர் அளவிற்கு அறிகுறியாய் நிற்பது போல’ என்று சொல்லி வைக்கலாம். ‘ஒரு வித மயக்கம்’ என்பதை இன்னொரு செயலாலும் விளக்கலாம். எழும்பூர் நிலையத்திலிருந்து பகல் பன்னிரண்டரை மணிக்குப் புறப்படும் ‘வைகை’ என்னும் விரைவு வண்டியில் பயணம் செய்யும் ஒருவர் பத்தரை மணிக்கே நிலையத்திற்கு வந்துவிட்டால் அவருக்கு இரண்டு மணி நேரம் கழிவது ‘காலம் மெதுவாய்ப் போகிறது போல்’ தோன்றும். அவரே வண்டி கிளம்புவதற்குப் பத்து மணித்துளிக்கு முன் வந்துகொண்டிருந்தால் ‘எங்கு வண்டி போய்விடுமோ?’ என்று மனம் பதறும்போது இந்தக் குறுகிய காலமாகிய ‘பத்து மணித்துளிகள்’ என்னும் காலம் விரைவாய் ஓடுவதுபோல் தோற்றமளிக்கும். ‘மெதுவாய்ப் போவதும்’ ‘விரைவாய் ஓடுவதும்’ மனத்தில் எழும் ‘மாயத்தோற்றங்களே’ என்பதை ஆழ்ந்து உணர வேண்டியதொன்றாகும்

அகிலம் : வெட்டவெளியும் அதனுள் அடங்கியிருக்கும் அண்டங்கள் யாவும் சேர்ந்ததுதான் அகிலம் (Universe) என்பது. கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்களும், அவற்றினின்றும் விடுபெற்ற தனித்தனி மண்டலங்களும் வால்மீன்களும் (Comets) விண்கற்களும் (Meteorites) எண்ணற்றவை கதிரவன் மண்டலத்தைச் கற்றிச் சுழன்றுகொண்டுள்ளன. இவற்றின் பிறப்பு, மூப்பு, சாக்காடு இவை பற்றிய செய்திகளை இன்றைய வான நூல் வல்லுநர்கள் அறிந்து வெளியிட்டுள்ளனர். மணிவாசகப் பெருமான் இந்த அகிலத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளதை ஈண்டுச் சித்திக்கலாம்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன”[1]
(பிறக்கம் - பெருக்கம், எழில் - எழுச்சி)


  1. 16. திருவா - திருவண்டப் பகுதி - அடி 1-4