பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

17


இவ்விடத்தில் ’நாராயாண’ உபநிடதத்தின் மந்திரத்தையும் சிந்திக்கலாம்.

"நாராயணன் பரப்பிரம்ம தத்துவமாகின்றான். முழுமுதற் பொருள் நாராயணன். பரஞ்சோதியாயிருப்பவன் நாராயணன், பரமாத்மாவாய் இருப்பவன் நாராயணன்."[1]

சங்கரனும் நாராயணனும் ஒன்றே என்பது அருமறையின் அமுதவாக்கு. அருமறையில் மெய்ப்பொருளுக்குக் கொடுத்துள்ள பல பெயர்களுள் 'நாராயணன்' என்பதும் ஒன்றாகும். நாரா - தன்னிடத்திலிருந்து தோன்றி வந்துள்ள பஞ்சபூதங்களுக்கும் அவற்றின் காரியமாகிய சகத்துக்கும்; அயனன் - தங்கும் இடமாய் இருப்பவன். நாரா + அயனன் - நாராயணன் என்பது அப்பெயரின் பொருளாகும். இந்தத் தத்துவத்தைப் புராணம் உருவகப்படுத்தி இயம்புகின்றது. நாராயணனுடைய உந்திக் கமலத்தினின்று நான்முகன் தோன்றி வந்துள்ளான் என்பது புராண வரலாறு.

"மெய்ப்பொருள்தான் வேத
முதற்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாராயணன்"[2]

என்ற திருமழிசையாழ்வாரின் கருத்தையும் ஒப்பு நோக்கி உணரலாம். இந்தப் புராண வரலாற்றை மங்கை மன்னன் "உந்திமேல் நான்முகனைப் படைத்தான், உலகு உண்டவன்”[3] என்று குறிப்பிடுவார்.

தொடர்ந்து மணிவாசகர் கூறுவார்:

"படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் காப்பவை கரப்போன், கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள் திருத்தகும்”.[4]

  1. மகா நாராயனோபநிடதம் 24-13 : 4
  2. நான். திருவந் 13
  3. நான். திருவந் 13
  4. திருவா - திருவண்டப்பகுதிகள் - அடி 13-16