பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

27


“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும் இந்தக்
காலத் திகிரி முதலான யாவும்
        கடல்க டைந்த
நீலத் திகிரி அனையார், அரங்கர்
        நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநா ளதனில்
        கொண்ட கோலங்களே.”40[1]

என்பது பாடல். அற்புதமான சாக்லட்போல் உள்ளது. சாக்லட்டை, அது பொதிந்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு பளபளக்கும் வண்ணத் தாள்களைக் களைந்து வாயில் போட்டு, உமிழ்நீருடன் கலந்து சுவைக்கும் போதுதான் அதன் சுவையை அநுபவிக்க முடியும். அங்ஙனமே இந்தப் திருப்பாசுரத்தையும் மனத்தில் வைத்து அசை போட்டுக் கரைத்தால்தான் அதன் பொருளை உணர்ந்து அநுபவிக்க முடியும்.

இந்தப் பாடலிலுள்ள “திகிரிகளை” முதலில் இன்னவையென இனங்கண்டு அறிந்துகொள்ள வேண்டும். ஞாலத்திகிரி: கதிரவனைச் சுற்றி வரும் அண்டங்களும், தன்னைத் தானே சுற்றி இயங்கும் கதிரவனும் பலகோடி மைல்களுக்கு அப்பால் பூமியில் சிறியதோர் இல்லத்தில் - திருவரங்கத்திலுள்ள இல்லத்தில் - வாழும் கவிஞனின் ஊனக் கண்ணுக்கு உருளைகளாய்த் - திகிரிகளாய்த் - தென்படுகின்றன. இப்பேரண்டச் சக்கரந்தான் ‘ஞாலத்திகிரி’ என்பது. முதுநீர்த்திகிரி: ஒவ்வோர் அண்டத்துடன் அவ்வண்டத்திலுள்ள பொருள்களும் உருமாறிச் சுழல்கின்றன. எடுத்துக்காட்டாய், கடல் நீர் - நீராவி - மழை - ஆறு - கடல்நீர் என்று சக்கரம் சுழல்கின்றது. இவ்வாறு ‘கடல்நீர்’ சுற்றுவதை ‘முதுநீர்த்திகிரி’ என்கின்றார் (முதுநீர் - கடல்). இந்தச் சக்கரத்தைப் போலவே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற பருவச்சக்கரங்களும் சுழல்கின்றன. பிறப்பு, இறப்பு என்ற சக்கரமும் சுழன்று வருகின்றது. காலத்திகிரி: இது கண்ணுக்குத் தெரியாத


  1. 40. திருவரங்கத்துமாலை - 84