பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

39


பல்லடுக்கு மாளிகைக்கு நாம் நேரில் காணும் சான்று. இத்தகைய மாளிகைகள் இலங்கை மாநகரில் திகழ்ந்தன என்பதைக் கம்பன் காட்டுவான்.

“பொன்கொண்டு இழைத்த
        மணியைக்கொடு பொதித்த
மின்கொண்டு இழைத்த
        வெயிலைக்கொடு சமைத்த
என்கொண்டு இயற்றிய
        எனத்தெரிகி லாத
வன்கொண்டல் தாவி
        மதிமுட்டுவன் மாடம்.”57[1]

இயல்பில் பொன்னால் செய்யப்பெற்று மணிகள் பதிக்கப்பெற்றுள்ள முகில் மண்டலத்திலும் மேலாய் உயர்ந்து திங்கள் மண்டலத்தையும் எட்டும் மாடமாளிகைகள் “மின் கொண்டு இழைத்தனவோ? வெயிலைக்கொண்டு சமைத்தனவோ? இன்னபடிதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் திகைக்கும்படி இருந்தன” என்று கவிஞன் கூறும் பொழுது அக்காலத்துக் கட்டடப் பேரறிஞர்களின் திறமையை ஒருவாறு விளக்குகின்றது என்பதனை அறிகின்றோம்.

அவதாரங்கள் : மச்சம்முதல் கல்கி வரை திருமால் எடுத்த (எடுக்கும்) பத்து அவதாரங்களையும் ஆய்ந்தால் அது கூர்தல் அறக்கொள்கையை விளக்குவதாய் அமையும் என்ற ஒரு சிந்தனையும் உண்டு. எல்லா ஆழ்வார்களுமே எல்லா அவதாரங்களில் ஈடுபட்டுப் பாசுரங்களை அருளியுள்ளனர். பத்து அவதாரங்களையும் பாதி வெண்பாவில் அமைத்துக்காட்டி மகிழ்வார் காளமேகம்.

“மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியில்என்
இச்சையிலுள் சென்மா எடுக்கவா - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாராரா
மாகோபா லாமா வாய்”

(மச்சம் - மீன்; கூர்மம் - ஆமை; கோலம் - பன்றி; சிங்கம் - நரசிங்கம்; வாமனம் - குறள் வடிவம்; மா - குதிரை என்ற பாடலின் பின்னிரண்டு அடிகளிலும் பத்து அவதாரங்களும் பாங்குற அமைந்திருத்தலைக் கண்டு மகிழலாம்.


  1. 57. கம்பரா. யுத்த கா. ஊர்தேடு - 1