பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


வள்ளுவர் வாக்கு : வள்ளுவர் பெருமான் பல்வேறு நிலையான உண்மைகளை மருந்து மாத்திரை போல் சிறிய குறள் வடிவில் தந்துள்ளார். அவற்றுள் ஒன்று

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.”60[1]

என்பது. இக்குறளின் கருத்து, பிறப்பியல் உண்மைப்படி பொருந்தாத கூற்றாகின்றது. வள்ளுவர் கூற்றினைப் பொய்யென்று அவ்வளவு எளிதாகவும் கூறிவிட முடியாது. அறிவு மரபு வழியாய் இறங்கும் என்று ஒப்புக்கொள்ளாமல் சூழ்நிலையால் - அடுத்த தலைமுறைக்கு முந்திய தலைமுறை அளிக்கும் வாய்ப்புகளால் - கடத்தப்பெறுகின்றது என்று கொண்டால் இவ்வுண்மை பொருந்தும் கூற்றாய் அமைகின்றது. நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கடத்துவன நிறக்கோல்களே (Chromosomes); நம்மிடம் நேரிடும் மாற்றங்கள் யாவும் நம்முடைய கரு - அணுக்களுடன் (Germ-cell) சேர்ந்திருக்க வேண்டும்; அஃதாவது, ஒவ்வொரு சிறப்பியல்களை விளைவிக்கும் மாற்றங்கள் அவற்றிற்குக் காரணமாயுள்ள குறிப்பிட்ட நிறக்கோல்களிலுள்ள குறிப்பிட்ட ஜீன்களில் (Genes) சேரவேண்டும், இஃது அறிவியல் உண்மைப்படி சாத்தியமன்று என்பதற்கு எண்ணற்ற சோதனைகள் சான்றுகளாய் அமைகின்றன.

மரபுவழி இறங்காப் பண்புபற்றி ஒரு சொல். இளைஞர் ஒருவர் மதுபானம் பருகும் பழக்கம் இல்லாத நிலையில் மகப்பேறு அடைகின்றார். பத்தாண்டுகளுக்குப் பிறகு போரில் தொண்டாற்றியதன் விளைவாய் மதுபானப் பழக்கம் அவருக்கு ஏற்படுகின்றது; எப்பொழுதும் மயக்க நிலையிலேயே இருக்கின்றார். இப்பொழுது அவருக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. இந்த இரு குழவிகளுள், இரண்டாவது குழந்தை குடிப்பழக்கத்தை மேற்கொள்ளக்கூடும். இஃது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையிடமிருந்து பெற்ற ஜீன்களிடையே மதுபானப் பழக்கம் இருப்பதால் பெற்றதன்று; ஜீன்களிடையே அத்தகைய பழக்கம் ஒன்றும் இல்லை. முதல் மகன் குடிவெறி இல்லாத அமைதியான சூழ்நிலையில் வளர்க்கப்பெற்றதால் அவனிடம் அப்பழக்கம் அமைய வழி இல்லை. இரண்டாவது மகன் குடிவெறி நிலவும் சூழ்நிலையில் வளர்ந்ததால் அவனிடம்


  1. 60. குறன் - 398