பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

43


அப்பழக்கம் அமைவதற்கு வழி ஏற்படுகின்றது. மதுபானப் பழக்கம் மரபு வழியாய் இறங்கும் ஒரு பண்புக்கூறு அன்று; அது சூழ்நிலையால் பெறும் பண்பாகும்.

“தக்கார் தகவிலர் என்ப அவரவர்
எச்சத்தாற் காணப் படும்” (குறள் - 114)

என்ற குறள் கூறும் கருத்தும் இதுவேயாகும். ‘தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை’ என்ற உலகியல் பழமொழியும் இதனையே வற்புறுத்துகின்றது. எனவே, மரபுவழியும் சூழ்நிலையும் இடைவிடாது இடைவினை புரிவதாலேயே மக்களிடம் பண்புகள் அமைகின்றன என்பது பெறப்படும். மரபுவழி தவறிய இடத்தில் சூழ்நிலை அதனை நிறைவு செய்யும். எடுத்துக்காட்டாய், ஓர் இசைப்புலவனின் மகனிடம் இசைப்புலமை மரபுவழியாய் இறங்காது. அவன் தன் மகனுக்கு அளிக்கும் பயிற்சியாலும் வாய்ப்பாகத் தரும் சூழ்நிலையாலும் அவனுடைய மகனும் சிறந்த பாடகனாய்த் திகழ ஏதுவுண்டு.

கபிலரகவல் : நிறக்கோல்கள் பொருந்தா நிலையைக் கபிலரகவல் குறிப்பிடுகின்றது.

“பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக்
கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ?
ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பில்
இருவகை யாகநீர் இயம்பிய குலத்து
ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின் றிவீரோ?
எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ
அந்நிலத் தந்தவித் தங்குரித் திடுமலால்
மாறிவே றாகும் வழக்கமொன் றிலையே.61[1]

(கருப்பொறை உயிர்ப்பு - பிள்ளை பெறுதல்; அங்குரித்தல் - முளைத்தல்)

என்ற கபிலரகவல் பகுதியில் ஓர் அறிவியல் உண்மை அடங்கியிருப்பதாய்க் கருதலாம்.


  1. 61. கபிலரகவல் - அடிகள் : 68-77.