பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



வெவ்வேறு இனத்தைச் (Species) சார்ந்த இருபிராணிகளிடையே நிறக்கோல்கள் பொருந்தா நிலை ஏற்படுகின்றது என்பது உயிரியல் காட்டும் உண்மை. எடுத்துக்காட்டாய், ஒரு பூனையும் நாயும் கலவி புரிந்து குட்டியினை ஈன முடியாது. இங்ஙனமே வாத்தும் கோழியும் இணைந்து இனப்பெருக்கம் செய்தல் முடியாது.

இயற்கை அன்னை இரண்டையும் இணைய வைப்பதில்லை. இதனால் இனம் காக்கப்பெறுகின்றது. பூனை இனமும் நாய் இனமும் வாத்து இனமும் கோழி இனமும் மாறாமல் காக்கப் பெறுகின்றன. இஃது ஓர் உயிரியல் உண்மை. ஆயினும், ஒரு குதிரையும் கழுதையும் (Donkey) கலவி புரிந்து, ஒரு கோவேறு கழுதை (Mule)யை உண்டாக்கலாம். ஆனால், கோவேறு கழுதையிடம் இனப்பெருக்கத்திற்குக் காரணமான பாலணுக்கள் உண்டாவதில்லை. முரண்பாடுள்ள நிறக்கோல்களே இதற்குக் காரணமாகும். ஆனால், சில அரிய சந்தர்ப்பங்களில், பல சிக்கலான காரணங்களால், பெண் கோவேறு கழுதைகள் கருத்தரிக்கும் தன்மையைப் பெறுகின்றன. ஆனால், ஆண் கழுதைகள் மலடாகவே உள்ளன. இதனால் கோவேறு கழுதைகள் நேர்முறையில் பல்கிப் பெருகமுடியாது என்பது அறியத்தக்கது. மேலும், சிங்கமும் புலியும் பிறப்பியல் அடிப்படையில் வேறுபட்டாலும், சில சமயம் இணைந்து “சிம்மம்” (Tiglon) என்னும் ஒரு வகைப் பிராணிகளை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றனர்.

மனத்தில் பதியுமாறு இன்னோர் உண்மை கபிலரகவலில் காணமுடிகின்றது.

“பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ?
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரில் பேதமாம் வடிவெவர் கண்டுளார்?
வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோ டறிவினில்
வேற்றுமை யாவதும் வெளிப்பட லன்றே”62[1]

என்ற பகுதியால், மானிட இனம் முழுவதும் ஒரே பிரிவினைச் சார்ந்தது என்ற உண்மை விளக்கப்பெறுகின்றது. ஆகவே, ஒரு கருநிறப் பெண்ணுக்கும் வெண்ணிற ஆணுக்கும் பிறக்கும்


  1. 62. கபிலரகவல்-அடி 78-83.