பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

45


குழவிகள் யாவும் மலடற்று இருக்கும். கோழியும் வாத்தும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவையாதலின் அவற்றின் கலவியினால் சந்ததியே தோன்றாமல் போயினும் போகலாம். அப்படித் தோன்றினாலும் அந்தச் சந்ததிகள் மலடாகவே இருக்கும் (எ-டு: கழுதை x குதிரை) என்பது அறியத்தக்கது.

சிகண்டி : துருபதனுக்கு மூன்றாவது பெண்பிள்ளையாய்ப் பிறந்து, பிறகு ஆணாய் மாறியவள். முற்பிறப்பில் இவள் அம்பை (காசியரசன் மகள்). காசியரசன் நியமித்த சுயம் வரத்தில் வீடுமன் அவன் புத்திரிகளாகிய அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் வலிதிற்கவர்ந்து, தம் தம்பியர் விசித்திரவீரியன் சித்திராங்கதனுக்கு மணம் செய்விக்க முயலுகையில், அம்பை, முன்பே தான் தன் தந்தையால் சாளுவ அரசனுக்குக் கொடுக்கப்பெற்றவள் என்று அறிவர் கூற, விடுமன் அவளைச் சாளுவனிடம் அனுப்பினார். அம்பை, ஒருவனால் வலிதில் கொள்ளப்பட்டவளாகையால் அவனை மணக்கச் சாளுவன் மறுத்தனன். ஆதலால், அம்பை தவம் செய்து, வீடுமன் உயிரைப் போக்குவதாய்ச் சூளுரைத்துத் தீயிற்பாய்ந்து உயிர் துறந்தாள். காளி தேவியின் வரத்தால் துருபதனுக்கு மூன்றாவது மகளாய்ப் பிறந்தாள் என்பது வரலாறு. வீடுமனும், ஒரு பெண்ணுக்கு எதிராய் ஆயுதத்தைத் தொடுவதில்லை என்று சூளுரைத்திருந்தார்.

பாரதப் பெரும் போரில், பத்தாம் நாள் போரில், கண்ணன் சிகண்டியைக் காண்டிபன் அருகில் இருக்க வைத்தான். உடனே விடுமன் வில்லைக் கீழே போட, பார்த்தன் பரந்தாமன் ஆணைப்படி வீடுமன்மீது அம்பெய்து மூர்ச்சை அடையச் செய்தனன். வீடுமன் - அம்பை - சிகண்டி வரலாறு விடுமனுக்கும் கண்ணனுக்கும் மட்டிலுந்தான் தெரியும்.

நவீன ஆராய்ச்சியில், பெண் பூப்பெய்தும் பருவத்தில் ஆணாய் மாறும் விந்தையைக் கண்டுள்ளனர். இலட்சக் கணக்கான மங்கையருள் யாரோ ஒருவர் இவ்வாறு மாறி இருப்பதைச் செய்தித்தாள்மூலம் அறிந்துள்ளோம். பல்லாண்டுகளுக்கு முன்னர்ச் செய்தித்தாளில் பழநியம்மாள் பழநியப்பன் ஆனார் என்று வேடிக்கையாய்ச் செய்தி வெளியிடப் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது என்பதாய் நினைவு.