பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

53




6. கணித இயல்

கவிஞன் வாக்கில் கணித உண்மை கற்பனையாய்க் காட்டப்பெறுகின்றது. ஒரு வடிவக் கணிதத்திலுள்ள (geometry) தேற்றம் (Theorem) ஒன்றையும் கவிதை ஒன்றனையும் கற்பிப்பதிலுள்ள வேற்றுமையை எண்ணிப்பார்த்தால் இது தெளிவாய்ப் புலனாகும். தேற்றத்தைக் கற்பிக்கும் பொழுது ஆசிரியர் தாம் கற்பிக்கப்போகும் தேற்றத்தின் உண்மையைத் திட்டமாய் அறிந்துகொண்டுள்ளார். எனவே, நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் அதனைக் கற்பிக்கும் பணியில் இறங்கு கின்றார். ஆனால், கவிதை கற்பிக்கும் பெரும்பாலோருக்குத் தாம் கற்பிக்கும் கவிதை மேற்குறிப்பிட்ட தேற்றத்தைப் போன்று உண்மையானதாய்த் தோன்றுவதில்லை: அஃது அழகையும் இன்பத்தையும் நல்க வல்லதாய் இருப்பினும், தேற்றத்தில் பொதிந்துள்ள உண்மையைப் போல், அ.து. அவர்கட்குப் புலனாவதில்லை; அவர்கள் மனத்தைக் கவ்வுவதுமில்லை. ஆயின், கவிதை கூறும் உண்மைதான் என்ன? கவிதை வாழ்க்கையின் உண்மைகளைக் கூறுகின்றது. "கவிதை, வாழ்விலிருந்து மலர்ந்தது; வாழ்விற்கே உரியது; வாழ்விற்காகவே நிலைபெற்றுள்ளது"70 என்று அட்சன் என்ற திறனாய்வாளர் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது. பொருள்களின் தன்மைக்கேற்றவாறு காணச்செய்வது, அறிவியல்; நடந்ததை நடந்த படியே உணர்த்துவது, வரலாறு; எப்படி இருந்தது என்பதைக் கூறுவது, கணிதம். 4 + 4 = 8 என்பது போல் கூறுவது. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது கவிதை. அரிஸ்ட்டாட்டில் கூறுவதுபோல, "கவிதையின் படைப்புகள் மெய்ம்மையானவை அல்ல; ஆனால், உயர்ந்த உண்மைத் தத்துவம் அமைந்தவை. எப்படி இருக்க வேண்டுமோ அவை களேயன்றி, எப்படி உள்ளனவோ அவை அல்ல” என்பதைப் புரிந்துகொண்டால் கவிதை கூறும் உண்மை ஒருவாறு புலனாகும்.

கணித உண்மையையே கற்பனை கலந்த உண்மையாய் அற்புதமாய்க் கூற வல்ல ஆற்றல் மிக்கது, கவிதை. கம்பனின்


70. Poetry is made out of life, belongs to life, exists for life" - Hudson : An Introduction to the study of Literature - p.92.


70. Poetry is made out of life, belongs to life, exists for life" - Hudson : An

Introduction to the study of Literature - p.92.