பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

59



மொழியில் பேசினாலும் அவர்கள் நெஞ்சம் வசமாய் அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியால் கேட்கின்றனர். கவிஞர் கற்பனை செய்த வானொலியில் மொழிபெயர்க்கும் வேலையும் நடைபெற்றுவிடுகின்றது. இத்தாலி நாட்டான், நல்ல அமெரிக்க நாட்டான், பொல்லா ஆங்கில நாட்டான் பேசுவதைத் ‘தமிழில்’ இவர்கள் கேட்கின்றனர். அவர்கள் மனப்பான்மையைச் சஞ்சீவி பர்வதத்தில் உலவும் இவர்கள் அறிகின்றனர்.

வள்ளி சிலைபோல் மாறி நாட்டுநிலையைச் சிந்திக்கின்றாள். மூலிகையால் நாட்டின் நிலையை அறிந்தது பற்றி மகிழ்கின்றாள். மூலிகையைக் கொண்டுவந்த களிப்பில் குப்பன் வள்ளியை முத்தமிடப் போகும்போது ‘ஐயையோ ஐயையோ’ என்று ஆரவாரத்துடன் எழுந்த அவள் மொழி, அவனைத் திடுக்கிடச்செய்கின்றது. பாகவதர் ஒருவர் இராமாயணக் கதையில் அநுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிக்கொண்டு போகும் கட்டத்தைக் காலட்சேபம் செய்துகொண்டிருந்த நிகழ்ச்சி அது. குப்பன் தான் நின்றுகொண்டிருந்த சஞ்சீவி மலைக்குத்தான் ஆபத்து வந்துவிட்டதென்று அஞ்சி நடுங்குகின்றான். வஞ்சி அவனது மூடத்தனத்திற்கு இரங்கி, பரிகசித்து, இராமாயணக்கதையில்தான் மலை தூக்கப்பட்டதேயன்றித் தாம் இருந்த மலைக்கு ஒன்றும் நேர்வில்லை என்று கூறிக் கதையைத் தொடர்ந்து கேட்குமாறு பணிக்கின்றாள். கதை முடிகின்ற கட்டம் வந்துவிடுகின்றது.

இப்போது கையிலிருந்த மற்றொரு மூலிகையை இருவரும் விழுங்குகின்றனர். இருவரும் இராமாயணக்கதை நடைபெறும் இடத்தை நேரில் கண்ணுறுகின்றனர். தொலைக்காட்சியில் பார்ப்பது போல நிகழ்ச்சிகள் அவர்களது கண்ணுக்குத் தெரிகின்றன. தெருவொன்றில்,

"மாளிகைக் குள்ளே மனிதர்கூட் டத்தையும்
ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
உட்கார்ந் திருப்பதையும் ஊர்மக்கள் செல்வதையும்
பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்
தட்டிப்பார்க் கின்றதையும் சந்தோஷம் கொள்வதையும்"[1]


  1. 75. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்