பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

37



அடைசல்

ஒருவனுக்குமுன் உள்ள மேசைப் பலகையிலே, படிப்பறை யிலே, படுக்கை அறையிலே, சட்டைப் பையிலே அடைசல்கள் இருந்தால், அவனது மூளையிலும் ஓர் அடைசல் ஏற்பட்டுவிடும்.


கேள்விச் செல்வம்

எதையும் எவரிடமும் கேட்டுவிடாதே. கேட்கும்போது யோசித்துக்கேள். அவரும் யோசித்துப் பதில் கூறுவதை மட்டுமே கேள். பிறர் எளிதாகப் பதில் கூறுகிற ஒன்றை நீ எவரிடமும் கேட்டுவிடாதே.

முட்டாளிடம் எதையும் கேட்டுவிடாதே. அதில் இரண்டுவித ஆபத்து உண்டு; ஒன்று, அவன் தவறாகப் பதில் கூறிவிடுவான். மற்றொன்று அவன் உன்னைத் தன்னைவிட மட்டமானவன் என்று கருதிவிடுவான்.

அறிஞனிடம் மட்டுமே கேள். அதில் இரண்டுவித இலாபமுண்டு; ஒன்று, அவன் சரியான விடையையே கூறுவான். மற்றொன்று, உன்னை மட்டமானவன் என்று கருதவும் மாட்டான்.

நீ பிறரிடம் கேட்கின்ற கேள்வி ஒவ்வொன்றையும் ஆர அமர யோசித்துக் கேள். கேள்வி ஒவ்வொன்றும் அவசியம் கேட்டுத் தீரவேண்டியதுதானா என்றும் யோசித்துக் கேள். அப்படிப் பட்டவற்றிலும் சிலவற்றை மட்டுமே கேள்.

பெரும்பான்மையான கேள்விகளைப் பிறரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, நீயே பொறுமையாய் இருந்து அறிந்து கொள்வது நல்லது. .

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நீயே அறிந்து கொள்ளக் கூடிய எளிதான ஒன்றை, அவசரப்பட்டுப் பிறரிடம் கேட்டுக் கொண்டே இராதே.

நீ கேட்கிற கேள்வி ஒவ்வொன்றும் உன்னையும் உனது அறிவையும் பிறனுக்குக் காட்டிக்கொண்டே இருக்கும். ஆகையினால், பிறரிடம் கேள்விகளைக் கேட்கும் ப்ோது, இதை மனத்தில் வைத்துக் கொண்டு கேள்.