பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85. குருவும் சீடர்களும்

தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு சொன்ன பின்புதான் எந்தவேலையையும் செய்வர். ஆகவே அவர்களுக்கு சிந்தனையறிவே வளரவில்லை.

ஒருசமயம் குரு அருகில் உள்ள ஒரு ஊருக்குக் குதிரையில் ஏறிப் புறப்பட்டார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஐந்து மைல் தூரம் சென்றதும் தன் பட்டாக்கத்தியைக் காணாத குரு சீடர்களை அழைத்து. ‘வெள்ளிப் பிடியில் தங்கமுலாம் பூசிய என் பட்டாக்கத்தி எங்கே? என்று கேட்டார். அவர்கள் மிகவும் பயபக்தியுடன் “குருவே, அது அப்பொழுதே கீழே விழுந்துவிட்டது. ஆனால் நீங்கள் எதுவும் சொல்லவில்லையாதலால் நாங்கள் எடுத்துவரவில்லை” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வருந்திய குரு, ‘இனிமேல் எது கீழே விழுந்தாலும் எடுத்து வரவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மறுமுறை பயணம் போகும்போது, நடுவழியில் சீடர்கள் “பயணத்தை நிறுத்துங்கள். குரு சொன்னதுபோல் செய்ததில் குதிரைச் சாணம் கொண்டு வந்த சாக்குகளில் நிரம்பிவிட்டது. இனி வேறு வழியில்லை” என்று குருவிடம் முறையிட்டனர். உடனே குரு “அட முட்டாள்களே! எதை எடுப்பது; எதை விடுவது என்பது தெரியாதா” என்று கூறி எடுக்கிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், விடுகிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், குரு எடுத்துச் சொல்ல, சீடர்கள் அதைக் கவனமாக எழுதிக் கொண்டனர்.