பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

வானத்தா னென்பாரு மென் கமற் றும்பர்கோன்
தானத்தா னென்பாருந் தாமென்க-ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான். (6)

இ-ள் : முற்பட்டெழுந்த நஞ்சினையுண்டாக்கிய பேரொளியுடன் மிளிரும் திருமிடற்றையுடைய வனும் ஞானமே திருமேனியாகயுடையவனும் ஆகிய இறைவன் (நம்மனோரால் அணுக வொண்ணாத) பாவெளியில் உள்ளான் என்றும் தேவர் தலைவன் வாழும் இடமாகிய தேவருலகில் உள்ளான் என்றும் சொல்லுவார் சொல்லுக. அவ்விறைவன் (அன்பர்க்கு அருள் புரியும் நிலையில்) எனது நெஞ்சமாகிய அணிய இடத்தில் இருக்கின்றான் என்றே யான் துணிவாகக் கூறுவேன். எ-று.

'நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (திருக்குறுந்தொகை) எனவும் 'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும், உறைவான்’ (திருக்கோவையார்) எனவும் வரும் அருளுரைகள் இங்கு நினைக்கத்தக்கன.

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்-யானேயக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். (7)

இ-ள் : ஒரு கையுடன் கூடிய விலங்காகிய அம் மதயானையை உரித்துப் போர்த்த நெற்றிக் கண்ணனும் திருவெண்ணிறணிந்தவனும் ஆகிய