பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கங்கையான் என்றமையால் உலகிற்கு வேண்டும் நீரினைத் தந்து படைத்தலும், திங்கட்கதிர் முடியான் என்றமையால் எவ்வகைப் பொருள்களையும் தத்தம் கால வெல்லையில் தேயாது நிலைபெற வைத்துக் காத்தலும், பொங்கொளிசேர் அங்கையான் என்றமையால் அங்ஙனம் தோன்றி நின்ற எவ்வகைப் பொருள்களையும் அழித்து ஒடுக்குதலும் என இறைவன் செய்யும் முத்தொழில்களும் குறிப்பான் உணர்த்தப்பட்டமை யுணர்க. ஆனால் அது ஒன்றே நினைந்திருந்தேன், துணிந்தொழிந்தேன், உள்ளத்தினுள் அடைத்தேன் என இயைக்க. நினைந்திருத்தல் என்றது கேட்டல் சிந்தித்தலையும், துணிதல் என்றது தெளிதலையும், உள்ளத்தினுள் அடைத்தல் என்றது நிட்டை கூடலையும் குறிக்கும் என்பர், ஒளியுடைய தீயினை ஒளியென்றார்.

அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினிதறிந்தோ மானால்-அதுவே
பணிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. (12)

இ-ள்: (மேற்கூறியவாறு இறைவனுக்கு ஆட்படுதலாகிய) அவ்வுபாயமே இறைவன் நம் பெருமானாகத் தோன்றி நம்மை ஆண்டருளுதற்குரிய தகுதியை தமக்கு நல்குவதாகும். அவ்வுபாயத்திற்கும் மூல காரணமாவது எதுவென ஆராய்ந்துணர்வோமானால் குளிர்ச்சியுற்று அசையும் நிலையில் கொன்றை மலராலாகிய முடிமாலையை யணிந்தவரும் ஒளிதங்கிய நெற்றியின்மேல் ஒப்பற்றதொரு கண்ணை வைத்தருளியவரும் ஆகிய இறைவர்க்கேயுரிய திருவரு