உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே யணிந்திரவிற் றீயாடு மெம்மானார்
வன்பேயுந் தாமு மகிழ்ந்து. (30)

இ-ள் அன்பரல்லாத பிறரால் அறிய வொண்ணாத பெருமையுடையவரும் அவ்விறைவரே. அவர்களிற் பிறராகி அருட் கண்ணுடையோராகிய அன்பர்கள் அறிந்து மகிழவல்ல ஞானத் திரளாய்த் திகழ்பவரும் அவரே. எம்பெருமானாகிய அம்முதல்வர் (தம்முடன் வைத்து மூவரென்றே யெண்ணி யிறந் தொழிந்த) ஏனையிருவருடைய எலும்புகளை யணிந்து வலியபேயும் தாமுமாக இரவில் தீயில் நின்று மகிழ்ந்து ஆடியருள்வர். எ-று

(முதலடியில்) பிறர் புறச்சமயத்தார். (இரண்டாமடியின் முதலில்) பிறர் - அவரொடு தொடர்பில்லாத மெய்யடியார்கள், (தனிச்சொல்வாய் வந்த) பிறர் - படைத்தலையும் காத்தலையும் மேற்கொண்டமையால் தம்மை இறைவனொடு வைத்து எண்ணிச்செருக்குற்ற ஏனை அயன் அரிஎன்ணும் இருவர்.

மகிழ்தி மடநெஞ்சே மானுடரி னீயுந்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனு மணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே யின்னும் பெருக்கு. (31)

மடமை பொருந்திய நெஞ்சமே, மக்கட் பிறப்பினருள் ஒருவர்க்குரிய நெஞ்சமாக விளங்குகின்றாய் ஆதலால் (எனது நெஞ்சமாகிய) நீயும் பெரிய