உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

இ.ள்: பூங்கொம்பு போல்வாராகிய உமையம்மையாரை ஒரு பாகத்திற் கொண்ட அழகனாகிய இறைவனது பவளம் போலும் செந்நிறம் வாய்ந்த திரு மேனியானது, (தனது இயல்பாகிய) முன்னைய நிலையில் செம்பொன்மலைபோன்று பேரொளியுடையதாய்த் கழும். அத் திரு மேனியின்மேல் வெண்ணீறு பூசப்பெற்றால் அதுவே மீட்டும் அழகிய வெள்ளிய மலையினைப் போன்று விளங்கும். எ-று.

கொம்பு - பூங்கொம்பு போல்வாராகிய உமாதேவியார்; உவம ஆகுபெயர். பவளமேனி என்றது, நிறம்பற்றிய உவமை; செம்பொன் அணிவரையே போலும் என்றது, நிறத்துடன் ஒளியுடைமையும் ஒருங்கு கருதியதாதலின் உவமைக்குவமை யன்றென வுணர்க. மறித்து - மீண்டும்,

மறித்து மடநெஞ்சே வாயாலு சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம்—குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு. (40)

இ.ள்: இளமை பொருந்திய நெஞ்சமே, (உலகப் பொருளிற் செல்லும் அவாவை) மீட்டு, இறைவனுக்குத் தொண்டு பூண்ட மெய்யடியார்களின் திருவடிகளைக் குறிக்கொண்டு தியானித்து வாயினாலும் போற்றி வணங்கி வழிபடுவாயாக. ஒருவராலும் விரும்பி மேற்கொள்ள முடியாத நிலையில் தானே தனது இச்சையால் கொண்ட திருவருளின் விளைவாகிய திருமேனியிலே திங்களை முடிமாலையாக