உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அளவே ஈர்ந்து எனமாறுக. இறைவனது சடைமீது விளங்கும் பிறைமதி வளர்ச்சியின்றி யிருத்தற்குரிய காரணங்களை தற்குறிப்பேற்ற அணியமைய அம்மையார் கற்பித்துரைத்த நயம் அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் எங்கள் பெருமானே யென்றிரந்து—பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே யறிவான் றனக்கு. (43)

இ—ள்: ‘எங்கள் பெருமானே, ஒளிதிகழ் இளம் பிறையாகிய இதனைச் சென்னியிற் சூடிக்கொண்டு இழிந்த பிச்சை யுணவை யேற்றற் பொருட்டு ஊர் தோறும் திரியாதே’ என இறைவனை இரந்து வேண்டிப் புகழ்மிக்க வானோர்கள் விலக்க முன்வராது போவராயின், உணர்த்துவார் பிறரை யின்றித் தானே எல்லாவற்றையும் உணரவல்ல முற்றறிவினனாகிய அப்பெருமானுக்கு(இதனை யறிவித்து) விலக்கும் ஆற்றலுடையோம் (சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய) யாமோ? எ-று.

தேய்ந்து சிறுகும் திங்களைச் சடையிற்சூடி ஒளி தந்த பெரியோனாகிய நீ, ஒளிமாழ்குஞ் செய்வினை யாகிய பிச்சைத் தொழிலை மேற்கொள்ளலாகாதென விலக்குவார், ‘திங்களிது சூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்’ என்றார். பொங்கு ஒளி-தாம் உளராம் காலத்து மிக்குத் தோன்றுதலாகிய புகழ். ஒளிய—ஒளியினையுடைய; பெயரெச்சக் குறிப்பு. இறைவனுக்குப் பிறர் சொல்லத் தக்க அறிவுரை எதுவுமில்லை யென்பார் ‘தானேயறி வான் தனக்கு’ என்றும், தவ வலிமையும் ஞானமும்