உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இ-ள்: எத்திறத்தார்க்கும் தலைவனாகத் திகழும் இறைவனொருவனையே உள்ளத்தால் கருதி நோக்கும் பெருநெறியாகிய சிவநெறியினை விரும்பி நின்று (அந்நெறியில் தடையின்றி யொழுகுதற்கு உறுதுணையாக) அப்பெருமானது பெருமைவாய்ந்த திருவருளையே வேண்டி, தலைவனாகிய அப்பெருமானை எவ்விடத்து எழுந்தருளியுள்ளான் என்று வினவித் தேடும் உலக மக்களே இங்கு என்னைப் போன்றாரது இழிந்த சிந்தையினும் அப்பெருமான் எழுந்தருளியுள்ளான். தெளிவுடைய உள்ளத்தினராய்க் காண முயல்வார்க்கு அவனைக் கண்டு மகிழ்தல் மிகவும் எளிதே எ-று.

இதன்கண் முதலடியில் நின்ற ‘பிரான்’ என்ற சொல், எல்லா நெறிகளும் தன்பால் வந்து சாரத் தான் எத்திறத்தார்க்கும் அருள் புரியவல்ல தனி முதல்வனாகத் திகழ்வோன் என்ற இயைபினை விளக்கி நின்றது. ‘எத்திறத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமான்’ எனப்போற்றுவர் ஆளுடைய பிள்ளையார். இனி, இரண்டாம் அடியின் முதற்கண் நின்ற ‘பிரான்’ என்ற சொல் பேரருளுக்கு நிலைக்களமாக விளங்குபவன் அவனொருவனே என அவன்பாலுள்ள பேரருளுடைமையாகிய இறைமைக் குணத்தினைச் சிறப்பித்து நின்றது. தனிச் சொல்லாய் நின்ற ‘பிரான்’ என்பது, உயிர்க்குயிராதலால் எம்பிரான் ஆயினான் என அம்முதல்வன் உயிர் தோறும் பிரிவற நிறைந்து நிற்றலைச் சுட்டியது. இங்ஙனம் பிரான் என்ற சொல் மூன்றிடங்களிலும் வெவ்வேறு பொருட் குறிப்பினைத் தந்து நிற்றலின் கூறியது கூறலன்மையுணர்க. நோக்குதல்- அவனருளே கண்ணாகக் கொண்டு மனத்தால் நோக்கி யுணர்தல். இது ‘நோக்கல் நோக்கம்’ எனப்படும்