41
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லாற்
பெறத்தானு மாதியோ பேதாய்—நிறத்த
இருவடிக்க ணேழைக் கொருபாக மீந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.
47
இ-ள் அறியாமை பொருந்திய நெஞ்சமே நிறம் பொருந்திய மாவடு வகிரன்ன கண்களையுடைய உமாதேவியார்க்குத் தனது ஒரு பாகத்தைத் தந்த இறைவனது திருவடி நீழலிலே சேர்ந்து நுகரும் திருத்தகவிற்றாகிய பேரின்பத்தை அவனை இடைவிடாது நெஞ்சத்துள்ளே நினைந்து வாழும் திருவருள் நெறியாற் சென்று அடைவதன்றி, அறிவிலியாகிய நீ நினது அரிய முயற்சி யொன்றினாலேயே பெறுதற்குரியை ஆவாயோ? (ஆகாய்) எ-று.
‘திரு, பெறத்தானும் ஆதியோ’ என இயைத்துரைக்க. ‘சென்றடையாத திருவுடையானை’ எனவும்,
‘எந்தையீச னெம்பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தைசெய் பவர்க்கல்லால் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமல உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே’
எனவும் வரும் அருளிச் செயல்கள் இவண் ஒப்பு நோக்கத் தகுவனவாகும். ‘ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்’ என்ற குறிப்பும் அது. வடி-மாவடு.