உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

திருமார்பி லேனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் — ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா வரா. 48

இ-ள்: பகுத்துணர்வு ஒரு சிறிதும் வாய்க்கப் பெறாத பாம்பாகிய அது, இறைவனது திருமார்பில் அணியப் பெற்றுள்ள செழுமை மிக்க பன்றிக் கொம்பினைப் பிறையெனக் கருதிப் பார்க்கும். அதே நிலையில் பெருமான் சடைமீது விளங்கும் பிறைத் திங்களையும் உற்று நோக்கும். இவ்விரண்டினுள் நிச்சயமாக இதுதான் பிறைச் சந்திரனென்று இன்றளவும் ஒரு நாளேனும் தெளிந்து கொள்ள முடியாது திகைப்புறுவதாயிற்று. எ-று.

ஒரு நாள் — ஒரு நாளேனும். ஒன்றாக — ஒருதலையாக, நிச்சயமாக. தேராது —தெளியாது. மதி ஒன்று இல்லா அரா - பகுத்துணர்வு சிறிதும் வாய்க்கப் பெறாத பாம்பு. மதி ஒன்று இல்லா அராவாகிய அது, பார்க்கும், நோக்கும், தேராது என வினை முடிவு செய்க.

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய வோடி—விராவுதலாற்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை. 49

இ-ள்: (நிகராவார் பிறரெவருமின்றித்) தனக் குத்தானே யொப்பாக விளங்கும் இறைவனது சடைக் கற்றைகள், வெள்ளியை அரத்தால் அராவி வளைத்தது போன்ற அழகிய பிறைச் சந்திரன் தண்ணிய ஒளிக்-