உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மற்றொரு பாம்பினை இடையிற் கச்சையாக அணிந்த நம் பெருமானது பொன்முடியானது, சிறப்பமைந்த கொன்றை மலர் செழிப்புற்று விளங்க நீர் நிரம்பிய கங்கையாறு பெருவெள்ளமாய் வானிடமெல்லாம் அலை வீசி யுலவப்பெற்று நேரே காண்பவர்களுக்கு ஒப்பற்ற கார்காலத்தின் தோற்றத்தைப் புலப்படுத்துவதாகும். எ-று.

நம்மீசன் பொன்முடி, கொன்றை மலர் தழைப்ப, யாறு நீத்தமாய் உலவி, காண்பார்க்குக் கார்(காலம்) போலும் என முடிக்க. உலவி, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கார், ஈண்டு ஆகுபெயராய்க் காலத்தை உணர்த்தி நின்றது. பேரியாறு பெருக்கெடுத்தலும் கொன்றை மலர் பூத்துக் குலுங்குதலும் கார் காலத்தின் இயல்பாதலின் கங்கை யாற்றினையும் கொன்றை மலர்களையும் தன்னிடத்தேயுடைய இறைவன் திருமுடி, கார்காலத்தின் தோற்றத்தை யுடையதாயிற்று என்பது கருத்து. செவ்வே காண்பார்க்கு எனக் கூட்டுக. செவ்வே-நேரே.

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே யெங் கொளித்தாய்
ஓருருவாய் நின்னோ டுழிதருவான் —நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. (54)

இ-ள்: கரிய மேகத்தின் நிறம் வாய்ந்த திருநீலகண்டத்தையும் நெற்றிக் கண்ணையும் உடைய எம்பெருமானே, (நினது திருவருள் வண்ணமாகிய புருட சக்தியாகி ) நின்னிற்பிரிவற ஓருருவாகவே ஒற்றித்துத் திரிபவனும், நீ ரின் தன்மை வாய்ந்த