உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநூல் மதிப்புரை

சீர்காழி, புலவர், த. சுந்தரேசன்

ஒரத்தூர் திரு. சு. குஞ்சிதபாதம் பிள்ளை அவர்கள் தம் மணிவிழா மலராகக் காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி உரை நூல் வெளியிடுவது மிகவும் போற்றத்தக்கது. உரை எழுதுபவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆய்வுத்துறைப் பேராசிரியர் வித்வான், திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர். க. வெள்ளைவாரணணார் அவர்களே. இவர் தமிழகம் அறிந்த தலைசிறந்த புலவர்களில் ஒருவர். எழுத்து, பேச்சு, ஆய்வு முதலிய தமிழ்த் துறைகளில் நிரம்பிய பயிற்சியுடையவர். அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்மாண் நுழை புலத்திற்கு உரை கல்லெனத் திகழ்வன அவர் எழுதிய நூல்களே. அவர் இலக்கணம், இலக்கியம், சமய நூல் முதலியவற்றில் கற்பன கற்று, அறிவன அறிந்து ஆய்வன ஆய்ந்து தம் புலமையைப் பல நூலளவையால் வெளிப்படுத்தியுள்ளார். கற்பவர் காமுறச் சொற்போர் புரிவதில் முன் நிற்போர் இவர். இவர் ஏறாத பேரவையோ, சங்கமோ, தமிழ்-அரங்கோ இல்லை. அடக்கத்தால் தான் பெற்ற கலைச் செல்வத்திற்கே பெருமை தந்தவர். இவர் எழுதிய உரை நூலைப் படித்துச் சுவைத்தேன், எளிய முறையில் அரிய பொருளை ஆங்காங்கு எழுதியுள்ளார். படிப்பவர்க்குப் பக்திச் சுவையும், தத்துவ உணர்வும், தெய்வப் பற்றும் உண்டாம் அளவு இந்நூல் அமைந்துள்ளது, இவ்வுரை நூலே மதிப்பிட ஓர் உரை கல்லும் வேண்டுமோ?